Last Updated:
ஸ்பேஸ் எக்ஸ் பங்குகளின் அபரிமித வளர்ச்சியால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் மற்றும் பணியாற்றிய 4 ஆயிரம் பேர் ஒரேநாளில் கோடீஸ்வரர்களாகி உள்ளனர்.
2035ஆம் ஆண்டுக்குள் ஒன்றரை லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்ட தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கும் நிலையில், ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் கோடிக்கு சொந்தக்காரராகி உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையை படைத்துள்ளார் எலான் மஸ்க்.
டெஸ்லா, எக்ஸ் என உலகின் முன்னணி நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்கின் மற்றொரு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் முதல் முறையாக அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், மறுசுழற்சி முறையில் ராக்கெட் உற்பத்தி, விண்வெளி சுற்றுப்பயணம், மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியமர்த்தும் முயற்சி உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் முதல்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் பட்டியலிடப்பட்டன. ஆரம்ப விலையாக 135 அமெரிக்க டாலருக்கு ஒரு பங்கின் விலை பட்டியலிடப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் 170 டாலர் வரை விலை உயர்ந்தது. பங்குகள் உயர்வு காரணமாக பட்டியலிடப்பட்ட சில மணி நேரங்களில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு, 2 புள்ளி 18 டிரில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 207 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சில மணி நேரங்களில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 7 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாயை ஈட்டி புது வரலாறு படைத்தது. இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ முதல்முறையாக பங்கு வெளியீட்டின் போது 2 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயை ஈட்டியது தான் முந்தைய அதிகபட்ச தொகையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்பேஸ் எக்ஸ் பங்கு விலை அதிகரிப்பால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து உலகின் முதல் டிரில்லியன் டாலர் பணக்காரர் என்ற சாதனையை படைத்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உயர்ந்த எலான் மஸ்க், தற்போது உலகின் முதல் டிரில்லியனராகி புது மைல்கல் படைத்துள்ளார். ஒரேநாளில் 1 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்பை எலான் மஸ்க் எட்டிய நிலையில், அதை ஒரு சராசரி அமெரிக்க குடிமகன் எட்ட 1 கோடியே 56 லட்சம் ஆண்டுகள் உழைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், ஒரு டிரில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் என்பதால் எலான் மஸ்கின் வங்கிக் கணக்கில் அவ்வளவு பணமும் இருக்காது என்பது தான் நிதர்சனமான உண்மை… ஏனெனில் சொத்துக்கள் முழுவதையும் தனது நிறுவனத்தின் பங்குகளாகவே எலான் மஸ்க் வைத்துள்ளார். டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் மட்டுமின்றி நியூராலிங், தி போரிங் கம்பெனி உள்ளிட்ட தனது மற்ற நிறுவனங்களிலும் கணிசமான பங்குகளை எலான் மஸ்க் தன் வசம் வைத்துள்ளார். ஒரு டிரில்லியன் டாலர் பணக்காரர் என்ற அந்தஸ்தை தன் வசம் வைத்திருக்கவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை காப்பற்றவும் ஏறத்தாழ 366 நாட்களுக்கு அந்நிறுவன பங்குகளை எலான் மஸ்க் விற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஸ்பேஸ் எக்ஸ் பங்குகளின் அபரிமித வளர்ச்சியால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் மற்றும் பணியாற்றிய 4 ஆயிரம் பேர் ஒரேநாளில் கோடீஸ்வரர்களாகி உள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் உருவாக்கிய கவன ஈர்ப்பால் அதன் பக்கம் முதலீட்டாளர்கள் திரும்பிய நிலையில் ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் தாய் நிறுவனமான ஆல்பாஃபெட், மெட்டா நிறுவன பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.


