
70 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 60 புள்ளி ஏழு நான்கு விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில், ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், பாஜக பெருவாரியான வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது. ஆனால், சிறிது நேரத்தில், ஆம் ஆத்மி கட்சி, பாஜகவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில், முன்னிலை நிலவரம் மாறியது. இருப்பினும் தொடர்ந்து முன்னிலை வகித்த பாஜக, 18 தொகுதிகளில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றது.
பெரும்பான்மைக்கு 36 இடங்கள் தேவைப்படும் நிலையில், மேலும் 29 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால், அக்கட்சி ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியானது. ஆம் ஆத்மி கட்சி 10 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்த நிலையில், 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாத துயரம் நீடிக்கிறது.
இந்நிலையில், புதுடெல்லி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்தார். புதுடெல்லி சட்டமன்றத் தொகுதியில் கெஜ்ரிவால் மற்றும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங் சாகிப் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங் சாகிப் 28 ஆயிரத்து 448 வாக்குகள் பெற்ற நிலையில், கெஜ்ரிவால் அவரை விட 3 ஆயிரத்து 182 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார்.
இதேபோன்று, டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவும் தோல்வி அடைந்தார். கடந்த 2 முறை பட்பர்கன்ஜ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மணீஷ் சிசோடியா, இம்முறை ஜங்புராவில் களம் காண்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் தர்வீந்தர் சிங் மர்வா போட்டியிட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், 572 வாக்குகள் வித்தியாசத்தில் மணீஷ் சிசோடியா தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தர்வீந்தர் சிங் மர்வா 34 ஆயிரத்து 632 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
எனினும், தற்போதைய முதலமைச்சரான அதிஷி கல்காஜி தொகுதியில் வெற்றிபெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக தலைவரும் முன்னாள் மக்களவை எம்பியுமான ரமேஷ் பிதுரியை 3 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இதற்கிடையே, டெல்லியில் பாஜக தொடர்ந்து, முன்னிலை வகிக்கும் நிலையில், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாஜகவினர் அதிக அளவு குவியத் தொடங்கியுள்ளனர். வெற்றி முகம் பிரகாசமாக உள்ள நிலையில், பாஜகவினர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Delhi,Delhi,Delhi
February 08, 2025 2:29 PM IST

