Last Updated:
வழக்கமாக ஜந்தர் மந்தர் அல்லது நாடாளுமன்றப் பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்படும் சூழலில், நாட்டின் உயர் பாதுகாப்பு பகுதியான பிரதமரின் இல்லத்தை நோக்கிப் பேரணி சென்று முற்றுகையிட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
பிரதமர் இல்லத்தை காங்கிரசார் முற்றுகையிட முயன்ற சம்பவம், விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லியில் மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட காவல்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை நோக்கிப் பேரணி நடத்தப்பட்டது.
டெல்லி 7, லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்திற்கு அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களைக் காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர்.
நாடாளுமன்றம் போன்ற வழக்கமாக அனுமதிக்கப்பட்ட போராட்டக் களங்களைத் தவிர்த்து, நாட்டின் மிக முக்கியப் பாதுகாப்பு மண்டலமான பிரதமரின் இல்லத்தை நோக்கிப் போராட்டத்தை நகர்த்தியிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘நீட் 2026’ (NEET-UG 2026) உள்ளிட்ட முக்கியத் தேசியத் தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக நடந்ததாகக் கூறி, மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் டெல்லியில் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், இந்தத் தேர்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் பேரணி செல்ல முயன்ற மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை தடியடி நடத்தியதாகவும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசித் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மாணவர்களின் மீதான தாக்குதலை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்ததால் டெல்லியில் பதற்றமான சூழல் காணப்பட்டது.
தென் ஆசிய நாடுகளில் சமீபத்தில் நிகழ்ந்த அரசியல் கொந்தளிப்பின் போது இலங்கை மற்றும் வங்கதேச பொதுமக்கள் அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர்களின் இல்லங்களை முற்றுகையிட்ட சம்பவங்களுடன் இப்போராட்டத்தை ஒப்புநோக்கிச் சிலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரம், அரசின் கொள்கைகளை எதிர்க்க நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் தேர்தல் முறைகளே சரியான வழி என்றும், உயர் பாதுகாப்பு பகுதிக்குள் பெருந்திரளான மக்களைக் கொண்டு செல்வது சட்ட ஒழுங்குப் பிரச்சனை மற்றும் வன்முறைக்கு வழிவகுக்கும் என்றும் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
இதன் காரணமாக காங்கிரசார் நடத்திய இந்த போராட்டம் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. பிரதமரின் இல்லத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் போராட்டக் களத்திற்குச் சென்று ராகுல் காந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க அரசு தயார் எனத் தெரிவிக்கப்பட்ட பிறகும், புதிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தைத் தொடர்ந்ததால், காவல்துறையினர் தலைவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.


