இரண்டு அணிளும் 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளை குவித்த நிலையில், ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் முதலிடத்திலும், பெங்களூரு இரண்டாமிடத்திலும் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை பேட்டிங் வரிசை அசுர பலத்தில் உள்ளது. தொடக்க வீரர்களான பிரியன்ஸ் ஆர்யா, பிரப் சிம்ரனில் தொடங்கி, ஆட்டத்தை முடிக்கும் வல்லமை கொண்ட இங்க்ளிஸ் வரை, பஞ்சாப்பிற்கு பலமாக பார்க்கப்படுகிறார்கள்.
அதே போன்று, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் பஞ்சாப் அணிக்கு தூணாக செயல்பட்டு வருகிறார். ஆனால், பந்து வீச்சில் அர்தீப் சிங்கை தவிர வேறு யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு திறம்பட விளையாடவில்லை. ஒரு சில போட்டிகளில் மட்டும் சாஹல் மற்றும் ஹர்ப்ரீத் பிரார் அணிக்கு பக்கப்பலமாக செயல்பட்டுள்ளனர்.
அதே சமயம், பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் ஆல் ரவுண்டராக ஆர்.சி.பி., உள்ளது. முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்நாள் கேப்டன் ரஜத் படிதரின் அதிரடியான ஆட்டங்களுடன் பிலிப் சால்ட்டும் பாஃர்மில் இருப்பது ஆர்சிபிக்கு அசுர பலத்தை கொடுத்துள்ளது. மேலும் டிம் டேவிட், லிவிங்ஸ்டன், ஜிதிஷ் ஷர்மா ஆகியோர் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படுவதால், சேசிங்கிலும் பெங்களூருவின் கை ஓங்கியுள்ளது.
பந்து வீச்சை பொறுத்தவரை டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் புவனேஷ்வர் குமார் – யாஸ் தயால், விக்கெட்களை கைப்பற்றினாலும், ரன்களை கட்டுப்படுத்துவது அவசியமானதாக பார்க்கப்படுகிறது. ஆல் ரவுண்டர் க்ரூனல் பாண்டியாவும் அவரது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரண்டு முறை மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2008 ஆம் ஆண்டு நடந்த முதல் ஐபில் தொடரில், அரையிறுதிக்கு முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ் அணி, சென்னையிடம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டு, இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்த பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தாவிடம் தோல்வியை சந்தித்தது.
பெங்களூரு அணியை பொறுத்தவரை, 9 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதுடன் 3 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஆனால், “ஈ சாலா கப் நமதே” என்பதே பெங்களூரு அணிக்கு கனவு வாக்கியமாகவே மாறி போனது.
11 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பஞ்சாப்பும், வெற்றியின் விளிம்பை எட்டி எட்டி பார்த்து வந்த பெங்களூரும் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேற முனைப்பு காட்டுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
May 29, 2025 10:05 AM IST

