Last Updated:
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும் கூடிய விரைவில் தமக்கே உரிய தேசிய அழைப்பு எண்ணைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி சம்பந்தப்பட்ட மோசடி வழக்குகள் சில வருடங்களாகவே வேகமாக அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அரசு மற்றும் வங்கிகள் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர். இது தொடர்பான ஒரு முயற்சியாக, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும் கூடிய விரைவில் தமக்கே உரிய தேசிய அழைப்பு எண்ணைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட வங்கிகளிடமிருந்து வரும் போன் கால்கள் மற்றும் மெசேஜ்களை எளிதாக அடையாளம் கண்டு, மோசடிகள் நடைபெறாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் ஒவ்வொரு வங்கிக்கும் ‘1600xx’ என்ற வரிசையில் ஆரம்பிக்கும் தனித்துவமான போன் நம்பர்களை அறிமுகப்படுத்துவதற்கான கோரிக்கையை வங்கிகள் முன்மொழிந்து உள்ளன. இந்த முயற்சி கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனியாக தேசிய அழைப்பு எண்ணை வழங்கி, அந்த எண்களுக்கு இன்கமிங் வசதிகளையும் அனுமதிப்பதன் மூலமாக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை உறுதி செய்யலாம் என்று ஒரு வங்கி அதிகாரி கூறியுள்ளார். இது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் ஏற்கனவே அரசு மற்றும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ஈடுபட்டுள்ளது மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் கூடிய விரைவில் எடுக்கப்படும்.
ஜனவரியில் ஆணை வெளியிட்ட RBI:
தற்போது வங்கிகள் தங்களுடைய கஸ்டமர்களை அழைப்பதற்கு 1600xx என்ற வரிசை கொண்ட பல்வேறு போன் நம்பர்களை பயன்படுத்தி வருகின்றனர். எனினும், கஸ்டமர்களால் மீண்டும் அந்த போன் நம்பர்களுக்கு அழைக்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ஜனவரி மாதத்தில் ஒரு ஆணையை பிறப்பித்தது. அதன்படி, வங்கிகள் பரிமாற்றம் சம்பந்தப்பட்ட போன் கால்களுக்கு ‘1600xx’ என்ற வரிசை நம்பரையும், விளம்பரம் சம்பந்தப்பட்ட போன் கால்களுக்கு ‘140xx’ என்ற வரிசை நம்பர்களையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறியது.
‘1600xx’ நம்பர்களில் இன்கமிங் கால் வசதி:
மேலும், அந்த வங்கி அதிகாரி கூறியபடி, ‘1600xx’ நம்பர்களில் இன்கமிங் கால் வசதிகளை பெறுவதற்கு வங்கிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வங்கிகள் தங்களை தொடர்பு கொள்வதற்கு ஒப்புதல் அளித்துள்ள கஸ்டமர்களுக்கான விலக்குகளுக்கு டிமாண்ட் உள்ளது.
அது மட்டுமல்லாமல், கடன் சம்பந்தப்பட்ட போன் கால்களுக்கும் 1600xx வரிசை எண்களைப் பயன்படுத்துவதற்கான கோரிக்கையை விடுப்பதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் வங்கி அதிகாரி தெரிவித்தார். இந்த மாற்றம் மூலமாக கஸ்டமர்கள் மிக எளிதாக நம்பகமான போன் கால்கள் எது என்பதை அடையாளம் காண்பார்கள் மற்றும் ஆன்லைன் மோசடி சம்பந்தப்பட்ட வழக்குகள் குறைவதற்கும் இது உதவியாக இருக்கும்.


