Last Updated:
இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் விளக்கம் அளித்தார்.
இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு இல்லை என்று நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தானுடன் சண்டை நிறுத்தத்திற்கு இந்தியா எப்படி ஒப்புக்கொண்டது என மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையில் வெளியுறவு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது, ஆபரேஷன் சிந்தூர் பற்றியும், எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது பற்றியும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் சண்டை குறித்தும் விவரித்தார்.
அப்போது, பாகிஸ்தான் உடனான தாக்குதலில் இந்தியாவின் விமானப்படை சார்ந்த எத்தனை விமானங்கள் சேதமடைந்தது என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த தகவல்களை தர இயலாது என விக்ரம் மிஸ்ரி பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்த உடன்பாட்டில் அமெரிக்காவின் தலையீடு எவ்வளவு இருந்தது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எதனால் அறிவிப்பை வெளியிட்டார் என்றும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். பாகிஸ்தான் பயன்படுத்திய சீனா மற்றும் துருக்கி நாட்டின் ராணுவ தளவாடங்கள் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன என்றும் அந்த நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்றும் உறுப்பினர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர்.
முதலில் அமெரிக்காவின் தலையீடு குறித்த கேள்விகளுக்கு விக்ரம் மிஸ்ரி பதிலளிக்க மறுத்ததாக கூறப்பட்ட நிலையில், இறுதியில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்று மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


