கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் 14, 15 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகின்றது. திருவிழாவுக்கு செல்ல ராமேசுவரத்தில் இருந்து 90 விசைப்படகுகளும், 22 நாட்டுப்படகுகளும் பதிவு செய்துள்ளன.
அத்துடன், பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படகுகளில் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திருவிழாவிற்கு செல்ல பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் மீன்துறை அதிகாரிகள் நேற்று கச்சதீவு திருவிழாவிற்கு செல்ல பதிவு செய்யப்பட்டு, ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளில் ஏறி படகின் உறுதித்தன்மை, நீளம், அகலம் படகிற்கான ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.
இதேபோல் திருவிழாவுக்கு செல்ல பதிவு செய்து, பாம்பன் கடல் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகளையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருவிழாவிற்கு செல்ல பெயர் பதிவு செய்துள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர்கள் ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு வரும்போது படகின் அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் மீன் துறை அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.