Last Updated:
சாம்பியன்ஸ் கோப்பை பரிசளிப்பு மேடையில் பாகிஸ்தான் பிரதிநிதிகள் யாரும் இல்லாதது அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சாடியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்ற நிலையில், பரிசளிப்பு மேடையில் பாகிஸ்தான் பிரதிநிதிகள் யாரும் இல்லாதது அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயிப் அக்தர் விமர்சித்துள்ளார்.
8 நாடுகள் பங்கேற்ற சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. 29 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இந்த போட்டித் தொடரை நடத்தியது. லீக் சுற்று போட்டிகளிலேயே பாகிஸ்தான் வெளியேறியது. மேலும் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றன. இந்த நிலையில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது. ஆனால், பரிசு வழங்கும் மேடையில், ஐசிசி சேர்மன் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலர் தேவஜித் சைகியா, நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ரோஜர் ட்வூஸ் தவிர, போட்டியை நடத்திய பாகிஸ்தான் சார்பில் யாருமே பங்கேற்கவில்லை.
இந்த நிகழ்வு குறித்து வீடியோ வெளியிட்டுள்ள முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சாடினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் அரசியல் நிகழ்வுகளால் துபாய்க்கு செல்ல முடியாத சூழல் நிலவியது. எனினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் சென்ற பிரதிநிதிகளும் கோப்பையை வழங்கும் மேடையில் நிற்கவில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக ஷோயிப் அக்தர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஐசிசி காரணமா?
பரிசளிப்பு நிகழ்வில் யார் கலந்துகொள்ள வேண்டும் என்பதை ஐசிசி தான் முடிவு செய்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுமைர் அகமது துபாயில் இருந்தாலும் அவரை ஐசிசி மேடைக்கு அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான மோசின் நக்வி அந்த நாட்டின் உள்துறை அமைச்சராகவும் இருப்பதால் அவரால் துபாய்க்கு வர முடியவில்லை. இதனால் அவர் சார்பில் சுமைர் அகமதுவை பாகிஸ்தான் பிரதிநிதியாக மேடைக்கு அழைத்திருக்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தை ஐசிசியிடம் எழுப்புவோம் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 10, 2025 12:28 PM IST


