Last Updated:
2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனியின் ரன் அவுட் இந்திய ரசிகர்களின் இதயத்தை நொறுக்கியது என்றே சொல்லலாம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில், நியூசிலாந்து எனும் தடையை தாண்டி இந்திய அணி கோப்பையை முத்தமிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. பல நாடுகள் பங்கேற்கும் ஐசிசி போட்டிகளில், இந்தியாவின் கோப்பை கனவுக்கு நியூசிலாந்து அனேக முறை தடை போட்டதால் இந்திய ரசிகர்களுக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷிப் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவின் கோப்பை கனவை தகர்த்தது நியூசிலாந்து. கென்ய தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போட்டியில் கேப்டன் கங்குலி சதத்தால் 264 ரன்களை எடுத்தது இந்தியா. 132 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தாலும், கிறிஸ் கெயின்ஸ் அதிரடியாக சதம் விளாச, கோப்பையை தட்டிச் சென்றது நியூசிலாந்து.
அடுத்தது, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. மழை காரணமாக 6 நாட்களாக நடைபெற்ற போட்டியில் தன்னுடைய நங்கூர பேட்டிங்கால் இந்தியாவிடமிருந்து வெற்றியை தட்டிப் பறித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். இப்போதும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்து நல்ல பார்மில் உள்ளார்.
இதை எல்லாவற்றையும் விட இந்திய ரசிகர்களால் மறக்க முடியாதது கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி. மழை காரணமாக 2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 239 ரன்களே எடுத்தது. இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என நினைத்த நிலையில், 5 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்தது இந்திய அணி. இதையடுத்து தோனி மற்றும் ஜடேஜாவின் போராட்டம் கைகூடாமல் அந்த போட்டியை 18 ரன்களில் தோற்று நாடு திரும்பியது இந்திய அணி.
இந்த போட்டியில் தோனியின் ரன் அவுட் இந்திய ரசிகர்களின் இதயத்தை நொறுக்கியது என்றே சொல்லலாம். என்னதான் 2015 ஆம் ஆண்டு அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்து உலகக்கோப்பையை இழந்திருந்தாலும், இந்த போட்டி இந்திய ரசிகர்களை உண்மையில் நொறுங்கச்செய்தது. தோனியின் கடைசி சர்வதேச போட்டியாகவும் அது அமைந்தது.
இதையும் படிக்க: சிஎஸ்கே அணியில் தோனியின் எதிர்காலம் என்ன? – முன்னாள் வீரர்கள் சொன்ன முக்கிய தகவல்!
இந்த தோல்விக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி பழி தீர்த்தது. மும்பையில் நடைபெற்ற அரையிறுதியில் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் அதிரடி சதத்தால் 397 ரன்களை குவித்தது இந்தியா. இதையடுத்து நியூசிலாந்தும் அதிரடியாக விளையாடிய போதும், வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. இருந்தும் அந்த உலகக்கோப்பையிலும் இந்திய அணி வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில் துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் மீண்டும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. 2000 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஈடாக நியூசிலாந்தை இந்திய அணி பழி தீர்க்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் ஆவலாக உள்ளது. நியூசிலாந்து அணியிடம் இதுவரை 2 முறை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துள்ள இந்திய அணி, இந்த முறை வென்று அந்த காயத்திற்கு பழி தீர்க்குமா என்றும் இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
March 07, 2025 8:46 AM IST


