குளுவாங்:
குளுவாங்கிலுள்ள சன்ரைஸ் பூங்காவில் உள்ள ஜாலான் லக்சமானாவில் நேற்று வெள்ளிக்கிழமை (நவ.15) மாலை நடந்த கொள்ளை சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் இறந்து கிடந்தார்.
குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும், மற்றொரு சந்தேக நபர் தலைமறைவாக இருப்பதாகவும் குளுவாங் காவல்துறை தலைவர், துணை ஆணையர் நிக் முஹமட் அஸ்மி ஹுசைன் கூறினார்.
நேற்றிரவு 7.12 மணியளவில் உள்ளூர் நபர் ஒருவர் வீடுடைப்பு குறித்து அதிகாரிகளுக்கு எச்சரித்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவு அதிகாரிகள் விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
“உடனே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இறந்து கிடந்தார்.
இறந்தவரின் வலது கையில் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கலாம், ஒருவேளை வீடு உடைக்கும் போது அல்லது தப்பிக்கும் முயற்சியின்போது இரும்பு வேலி அல்லது வேறு பொருளால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதனால் பெரிய இரத்த நாளம் அறுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் நம்புவதாக, இன்று சனிக்கிழமை (நவம்பர் 16) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் சொன்னார்.


