சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநிலக் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில், சிரம்பானைச் சுற்றியுள்ள ஏழு இடங்கள் மற்றும் நீலாயில் உள்ள தற்காலிகப் பலகை வீட்டு குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 41 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 9.00 மணி முதல் இன்று அதிகாலை 3.00 மணி வரை நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது, மொத்தம் 178 வெளிநாட்டவர்கள் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 18 முதல் 58 வயதுக்குட்பட்ட 41 பேர் பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 33 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவர். இவர்கள் இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, மியன்மார், சீனா, பாகிஸ்தான், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என நெகிரி செம்பிலான் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் முகமட் ரசீப் யாசின் உறுதிப்படுத்தினார்.
“பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள், தகவல்கள் மற்றும் சுமார் ஒரு வார காலம் மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது” என்று, அவர் சொன்னார்.
செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது பயண ஆவணங்கள் இல்லாதது, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் அதிகமாகத் தங்கியிருந்தது உட்பட 1959/63 குடிநுழைவுச் சட்டம், 1966 கடவுச்சீட்டுச் சட்டம் மற்றும் 1963 குடிநுழைவு விதிகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



