International
oi-Mani Singh S
ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள முக்கியமான இடங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ரியாத்தில் உள்ள ஏர்போர்ட்டில் இருந்து கரும்புகைகள் வெளியேறியதால், தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான சில மணி நேரங்களில் ஹவுதிக்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் அந்த நாட்டு அரசுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்குழுவான ஹவுதி அமைப்புக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதலே மோதல் நீடித்து வரும் நிலையில், சமீப நாட்களாக போர் தீவிரம் அடைந்துள்ளது. இதில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு ராணுவம் களமிறங்கியுள்ளது.

போர் தீவிரம்
இதனால், சவுதி அரேபியாவை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை ஹவுதிக்கள் நடத்தி வருவதால், சவுதி அரேபியாவில் அவ்வப்போது ஏர் சைரன்கள் ஒலிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 16 ஆம் தேதி இஸ்லாமியர்களின் புனித மெக்கா நகரை குறிவைத்து டிரோன் தாக்குதலை ஹவுதிக்கள் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மெக்காவின் தடைசெய்யப்பட்ட வான்எல்லைக்குள் நுழைய முயன்ற அந்த டிரோனை, சவுதியின் ராயல் வான்பாதுகாப்புப் படை ரேடார் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து, நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியது. அதேநேரத்தில் மெக்கா நகரை குறிவைத்து தாக்கவில்ல என்று ஹவுதி கிளர்ச்சிக்குழு மறுப்பு தெரிவித்து இருந்தது. இவ்வாறாக கடந்த சில நாட்களாக சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சிப் படை இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது.
விமான சேவைகள் பாதிப்பு
ஹவுதி படையின் தலைநகரான சனா மற்றும் ஹோடைடா துறைமுகம் மீது சவுதி போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதற்கு பதிலடியாக சவுதியின் ஜெட்டா, ரியாத் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சிக்குழு டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு தாக்கி வருகிறது. ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சிக்குழு தாக்கியது. இதில், விமான நிலையத்தில் எரிபொருள் தொட்டியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் அங்கு கரும்புகை சூழ்ந்தது. தீப்பிழம்புகளும் கிளம்பின.
இதனால், அங்கு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. ஏர் சைரன்களும் ஒலிக்கப்பட்டு மக்களை சவுதி அரேபியா அலர்ட் செய்தது. ஹவுதி கிளர்ச்சிக்குழுவின் இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் அவையும் கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, சவுதியில் உள்ள முக்கியமான இடங்களை குறிவைத்து தாக்கியதை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
நீடிக்கும் பதற்றம்
இது தொடர்பாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு கூறும் போது, சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள முக்கியமான இடங்களை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கினோம்” என்று தெரிவித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சிக்குழுவின் தாக்குதலுக்கு சவுதியும் பதிலடி கொடுக்கும் என்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்தபாடில்லை.

