International
oi-Halley Karthik
பெய்ஜிங்: சீனா தனது அடுத்த தலைமுறை போர் விமானங்களின் தயாரிப்பு மற்றும் சோதனைகளை வேகப்படுத்த, மேற்கு பகுதி பாலைவனத்தில் ரகசிய விமானப்படை தளத்தை பிரம்மாண்டமாக விரிவாக்கம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன ராணுவம் அமெரிக்காவுக்கே டஃப் கொடுத்து வருகிறது. இந்த இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அமெரிக்காவை ஓவர் டேக் செய்யவும் சீனா பெரிய பிளானை எக்ஸிக்யூட் செய்து வருகிறது.

இந்த பிளான் முக்கியமான அங்கம்தான் இந்த ரகசிய ஏர் பேஸ். சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள லோப் நூர் என்ற பகுதியில் இது அமைந்துள்ளது. லோப் நூர் என்பது மக்கள் நடமாட்டம் இல்லாத பரந்த பாலைவனப் பகுதி என்பதால், பிற நாடுகளின் உளவு பார்வையில் படாமல் சோதனை ஓட்டங்களை ரகசியமாக நடத்த சீனாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
6ம் தலைமுறை விமானங்கள்
இருந்தாலும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் இந்த ரகசிய ஏர் பேஸ் விஷயம் வெளியில் கசிந்திருக்கிறது. இங்கு 4 பெரிய விமான கூடாரங்கள், புதிய டாக்சிவேக்கள், என்ஜின் சோதனைக்கான வட்ட வடிவ தளம் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் போன்றவை புதியதாக கட்டப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தொடங்கப்பட்ட இந்த கட்டுமானப் பணிகள் மூலம், இந்த தளத்தின் உள்கட்டமைப்பு வசதி தற்போது 2 மடங்காக அதிகரித்திருக்கிறது. தற்போது இந்த ஏர் பேஸில் 6ம் தலைமுறை விமானங்கள் இயக்கப்படுவது தெரிய வந்திருக்கிறது.
செயற்கைக்கோள் படங்கள்
வால் பகுதி இல்லாத சீனாவின் 6ம் தலைமுறை போர் விமானமாக கருதப்படும் J-36 முதன்முதலில் கண்டறியப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே J-XDS அல்லது J-50 என்று அழைக்கப்படும் மற்றொரு அடுத்த தலைமுறை அதிநவீன போர் விமானமும் இந்த தளத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது.
முக்கியமான விஷயம்
அதாவது, இங்கு கட்டப்பட்டிருக்கும் பிரமாண்ட ஹேங்கர்கள் சீனாவின் ரகசிய திட்டமான ‘H-20’ ஸ்டெல்த் போர்க்கப்பல்/பாம்பர் விமானத்தை நிறுத்தி வைப்பதற்கும், சோதனை செய்வதற்கும் ஏதுவாக கட்டப்பட்டிருக்கலாம் என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
‘H-20’ ஸ்டெல்த் பாம்பர்
இந்த விமானம்தான் முக்கியமான மேட்டர். அதாவது ஒரு நாடு நிலம், நீர் மற்றும் வான்வெளி ஆகிய மூன்று வழிகளிலும் அணு ஆயுதங்களை ஏவும் வல்லமை கொண்டிருந்தால், அதை ‘அணுஆயுத முக்கோணம்’ என்று சொல்வார்கள். சீனாவை பொறுத்தவரை நீரிலும், நிலத்திலும் அணு ஆயுதத்தை ஏவும் வசதி இருக்கிறது. ஆனால், வான் வழியாக அணு ஆயுதத்தை ஏவும் வசதி இல்லை. இதை சாத்தியப்படுத்தும் ஆயுதம்தான் இந்த ‘H-20’ ஸ்டெல்த் பாம்பர்.
இந்தியாவுக்கு அச்சுறுத்தல்
இந்த விமானம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது சீனாவின் வான்வழி அணு ஆயுத திறன் பல மடங்கு சக்தி வாய்ந்ததாக மாறும். ‘H-20’ ஸ்டெல்த் பாம்பர் சுமார் 8,500 கி.மி முதல் 12,000 கி.மீ வரை அசால்ட்டாக பறக்கும் திறன் கொண்டது. அதாவது பசிபிக் கடலில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளத்தை மொத்தமாக காலி செய்ய முடியும். மட்டுமல்லாது அமெரிக்காவின் நிலப்பகுதிகள் சிலவற்றையும் இதனால் தாக்க முடியும். இந்த விமானம் எளிதாக ரேடாரில் சிக்காது. எனவே இந்தியாவுக்கும் இது அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் இந்த பாலைவன ஏர் பேஸ், ஒரே நேரத்தில் பல மேம்பட்ட போர் விமான திட்டங்களை எவ்வித தடங்கலும் இல்லாமல் மிக அதிவேகமாக சோதனை செய்து ராணுவத்தில் இணைப்பதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இது 2035க்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரலாம் என்று சொல்லப்படுகிறது.




