இந்திய ஐடி நிறுவனங்களை துரத்தும் புதிய பூதம்.. ஏஐ எல்லாம் மலை ஏறியாச்சு..!
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகியவை இன்றைய வர்த்தகத்தில் சுமார் 3 சதவீதம் வரையில் குறைந்து உள்நாட்டு முதலீட்டாலர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த சரிவுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் அளவுக்கு அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகியது தான். இதற்கும் ஐடி சேவை நிறுவனங்களுக்கும் என்ன தொடர்ப்பு..? ஏன் ஐடி பங்குகள் சரிகிறது..?
இது நாள் வரையில் ஐடி சேவை துறை நிறுவனங்களுக்கு வில்லனாக இருந்தது ஏஐ தொழில்நுட்பம் தான், இதில் ஏற்கனவே ஆந்திராபிக் நிறுவனத்தின் கிளாட் பெரும்பாலான கோடிங் பணிகளையும், டெக் சேவைகளையும் மிகவும் குறைந்த கட்டணத்தில், குறைந்த காலக்கட்டத்திலும் முடிக்க கூடிய திறன் கொண்டதாக இருக்கும் வேளையில் இதற்கு போட்டியாக ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் அஸ்திரா ஏஐ மாடல் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

இது ஒருபக்கம் ஐடி சேவை துறை நிறுவனங்களின் தேவையை பெரும் கேள்விக்குறியாக்கி வரும் நிலையில் அடித்த பிரச்சனை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வாயிலாக வந்துள்ளது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று நிஃப்டி ஐடி குறியீடு 2 சதவீதம் வரையில் குறைந்துள்ளது, இதன் வாயிலாக அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும் குறைந்துள்ளது. இன்போசிஸ், எல்டிஐ மைண்டுட்ரீ, மெப்சிஸ் பங்குகள் சுமார் 3 சதவீதம் வரையிலும், டெக் மஹிந்திரா, ஆரக்கிள், கோபோர்ஜ், ஹெச்சிஎல், விப்ரோ, பெர்சிஸ்டென்ட் டிசிஎஸ் பங்குகள் சுமார் 1-2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் விவசாயம் அல்லாத பரிவில் 1,62,000 பேருக்கு வேலைவாய்ப்பில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது, இக்காலக்கட்டத்தில் 53000 முதஸ் 65000 பேருக்கு தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூடுதலாக 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து 4.1 சதவீதமாகவே உள்ளது.
பொதுவாக சந்தையில் அதிகப்படியான லேவைவாய்ப்புகள் உருவாகினால், சந்தையில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் என்பது பொருள். ஊழியர்களுக்கு அதிகப்படியான தேவை இருந்தால் நிறுவனங்கள் அதிக சம்பளம் கொடுத்து திறன்வாய்ந்த ஊழியர்களை எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாக்கும், இதனால் நிறுவனத்தின் செலவுகள் அதிகரிக்கும்.
பொதுவாக நிறுவனங்களின் செலவுகள் அதிகரித்தால் discretionary spending அளவுகள் குறையும், இது ஐடி நிறுவனங்களுக்கான வர்த்தகம் மற்றும் வருமானம் குறைப்பை ஏற்படுத்தும் என்பதால் ஐடி பங்குகள் சரிந்துள்ளது.
இதேவேளையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகும் போது, மக்களிடம் செலவு செய்வதற்கான பணம் அதிகமாக இருக்கும், இதனால் வர்த்தகம் அதிகரித்து பணவீக்க உயர்வுக்கு வழிவகுக்கும்.
தற்போது அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தை குறைக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும் வேளையில், இந்த பணவீக்க உயர்வை கட்டுப்படுத்த 2026ஆம் ஆண்டில் மட்டும் 2 முறை குறைந்தப்பட்சம் 0.25 சதவீதம் பென்ச்மார்க் வட்டி விகிதம் உயர்த்த கூடும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
வட்டி விகிதம் உயர்ந்தால் நிறுவனங்கள் வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டியும் அதிகரிக்கும். இதன் வாயிலாகவும் நிறுவனங்களின் நிதி நிலை பாதிக்கும் காரணத்தால் ஐடி சேவைகளுக்காக செலவு செய்வது குறையும்.
இப்படி 2 வழியில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு இந்திய ஐடி சேவை நிறுவனங்களை பாதித்துள்ளது.

