Tamilnadu
oi-Vignesh Selvaraj
சேலம்: தமிழக அரசு பள்ளிகளில், நீட் பயிற்சிக்காக வட மாநில ஆசிரியர்களை நியமித்துள்ளது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சிக்கனம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பூரில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை விடுதி வசதியுடன் செயல்படும் இந்த மாதிரி பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு நீட், ஜே.இ.இ போன்ற தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் இந்த பள்ளியில் மாணவ மாணவிகளை சேர்க்க பெற்றோர் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் இந்த மாதிரி பள்ளியில் படித்த 5 மாணவ, மாணவிகள் 7.5% உள் இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர். இதனால் இப்பள்ளி தமிழகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில்,குப்பூர் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமின்றி வட மாநிலங்களை சேர்ந்த ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் சர்சசையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் மொழி தெரியாத ஆசிரியர்களை வைத்து தமிழக மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பிக்க முடியும்? இதனால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படாதா? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
வேல்முருகன் கண்டனம்
இதுதொடர்பாக தவாக தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குப்பூர் அரசு மாதிரிப் பள்ளியில், நீட் மற்றும் ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்க ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது.
நீட் தேவையில்லை என தமிழகம் உறுதியாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, அதற்கான பயிற்சியை வழங்க வெளிமாநிலங்களில் இருந்து ஆசிரியர்களைத் தேடி அழைத்து வருவது ஏன்?
தமிழகத்தில் கல்வித் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள், போட்டித் தேர்வு நிபுணர்கள் என பெரும் மனிதவளம் உள்ளது. அப்படியிருக்க, இந்தப் பொறுப்பை ஏற்கும் திறமை கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அரசு முதலில் அடையாளம் காணாதது ஏன்?
இது வெளிமாநிலத்தவர்களுக்கு எதிரான நிலைப்பாடு அல்ல. ஆனால், தமிழகத்தின் அரசுப் பள்ளியில் உருவாகும் வாய்ப்பில், தமிழகத்தில் உள்ள தகுதியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டாமா? என்பதே அடிப்படையான கேள்வி. மேலும், அந்த 5 பேரைத் தேர்ந்தெடுத்தது யார்? எந்த விதிமுறையின் கீழ் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது? அவர்களின் கல்வித் தகுதி மற்றும் கற்பித்தல் அனுபவம் என்ன?
அவர்களுக்கான ஊதியத்தை வழங்குவது யார்? தமிழகத்தில் உள்ள தகுதியானவர்களைப் பரிசீலிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டதா? இந்த விவரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறியும் வகையில் அரசு வெளிப்படுத்த வேண்டும்.
மாணவர்களின் நலனுக்காக உடனடி பயிற்சி தேவைப்படலாம் என்பதை ஏற்றுக்கொண்டாலும், நீட் தொடர்பான தமிழகத்தின் அரசியல் மற்றும் கல்விக் கொள்கை நிலைப்பாடு என்ன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தின் அறிவாற்றல் வளத்தைப் பயன்படுத்தாமல் வெளியிலிருந்து மனிதவளத்தை இறக்குமதி செய்வது சரியான அணுகுமுறையா? என்ற கேள்விக்கும் விடை தேவை.
எனவே, குப்பூர் பள்ளி விவகாரத்தில் உண்மையை மறைக்காமல் முழுமையான விளக்கத்தை அரசு வெளியிட வேண்டும். தமிழகத்தில் தகுதி பெற்றுள்ள ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களை மாவட்ட வாரியாக அடையாளம் கண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற கல்விசார் பணிகளுக்கு அவர்களுக்கு உரிய வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.
நீட் வேண்டாம் என்ற தமிழகத்தின் உரிமைக் குரலுக்கும், நீட் பயிற்சியை முன்னெடுக்கும் நடைமுறைக்கும் இடையிலான முரண்பாட்டை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
சீமான் கண்டனம்
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் அரசுப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு எப்படி அனுமதித்தது? இதுதான் தவெக அரசு மாநில உரிமைகளைக் காக்கும் முறையா?
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள குப்பூரில் அரசு மேல்நிலை மாதிரிப் பள்ளியில், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்த குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 5 பேரை ஆசிரியர்களாக நியமனம் செய்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?
யாருடைய உத்தரவின் பேரில் அரசுப் பள்ளியில் வட மாநிலத்தவர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்?
தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்களை ஆசிரியர்களாக நியமித்தால் மாணவர்களுக்குப் புரிதல் குறைபாடு ஏற்பட்டு அவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படாதா?
நீட் தேர்வை நடத்தும் பொறுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்தபோதே நம் நாட்டில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டுமென்று அமெரிக்க முதலாளிக்கு என்ன அக்கறை இருக்கப்போகிறது? என்ற கேள்வியை நான் எழுப்பினேன். அதைப்போலவே தமிழ்நாட்டு மாணவர்கள் இந்திய அளவிலான போட்டித் தேர்வில் வெல்ல வேண்டும் என்று வடமாநிலத்தவருக்கு என்ன அக்கறை இருக்கப்போகிறது?
அண்மையில் இப்பள்ளியில் பயின்ற 5 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நிலையில், அதனைக் கெடுப்பதற்காகவே வட மாநில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா?
வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 ரூபாய் தருவதாகக் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை இப்பொழுது அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழக நடத்துநர்கள் நியமனம் தொடங்கி ஆசிரியர் பணி நியமனம் வரை வெளிமாநிலத்தவர்களுக்குக் கொடுத்துப் பறிப்பது என்ன நியாயம்?
தமிழ்நாட்டில் இத்தகைய தேர்வு பயிற்சிகளை வழங்குவதற்கான அறிவும், திறனும் வாய்ந்த ஆசிரியர் பெருமக்களே இல்லையா? பல இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் படித்துப் பட்டம் பெற்று, பல ஆண்டுகளாக வேலையின்றி வீதியில் போராடிக் கொண்டிருக்கும்போது, வட மாநிலத்தவரை தமிழ்நாட்டில் ஆசிரியர்களாக நியமிப்பது ஏன்?
தூய்மைப்பணியாளர்கள், நடத்துநர்கள், ஆசிரியர்கள் என்று அடுத்தடுத்து அரசுப் பணியிடங்கள் அனைத்துமே தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்படுவார்கள் என்றால் அரசுத்துறைகளின் வேலைதான் என்ன? அனைத்துமே தனியார் முதலாளிகள்தான் தீர்மானிப்பார்கள் எனில், அரசுக்கு பொதுப்பணி, போக்குவரத்து, உயர்கல்வி, பள்ளிக்கல்வி என்று தனித்தனி துறைகள் எதற்கு? தனித்தனி அமைச்சர்கள் எதற்கு? இது என்ன மாதிரியான மாற்று?
ஏற்கனவே, முதலமைச்சரிடம் முதன்மையாக எந்தத் துறைகளும் இல்லை. அனைத்து முக்கியத் துறைகளும் மற்ற அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சரும் மூன்று நான்கு முதன்மையான துறைகளை வைத்துள்ளார்கள். எல்லாத் துறைகளையும் அமைச்சர்களிடம் அளித்துவிட்டால் முதலமைச்சரின் வேலை என்ன? ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் வெளியிடுவது மட்டும்தானா?
வேளாண்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டால் விளையாட்டுத்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கேள்வி கேட்டால் பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். நீர்வளத்துறைப் பற்றிக் கேள்வி கேட்டால் அறநிலையத்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். சுற்றுலா குறித்த கேள்விக்குச் சுற்றுச்சூழல் அமைச்சர் பதில் சொல்கிறார். யாருக்கு எந்த அமைச்சகம்? யார் எந்தத்துறையின் அமைச்சர் என்பதே இன்னும் முழுமையாக முறைப்படுத்தப்படவில்லை. இப்போது அமைச்சர்களுக்கும் எந்த வேலை இல்லை என்ற அளவிற்கு, அனைத்து துறைகளின் பணிகளுமே தனியார் நிறுவனம் மூலம் வடமாநிலத்தவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் பணிநியமனங்கள் அனைத்தும் வடமாநிலத்தவரைக் கொண்டு நிரப்பப்படுவதை, தமிழிளம் தலைமுறைப் பிள்ளைகள் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இத்தகைய கொடுமைகள் தொடர்ந்தால் விரைவில் நாம் தமிழர் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

