இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், “ஓட்டோ இயக்குவதற்கான குறைந்தபட்ச வயதை 40ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். பாடசாலையை விட்டு வெளியேறிய உடனேயே ஓட்டோ வாங்கி வீதிகளில் இயக்கும் நிலை இருக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
இலங்கையில் முச்சக்கர வண்டி (ஓட்டோ) ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தொழிற்கல்வி பிரதியமைச்சர் நலின் ஹேவஹே தெரிவித்தார்.
பாடசாலை கல்வியை நிறைவு செய்த உடனேயே இளைஞர்கள் ஓட்டோ வண்டிகளை வாங்கி வீதிகளில் ஓட்டுநர்களாக மாறும் நிலையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், “அதனால்தான் நாங்கள் கல்வியில் மாற்றங்களைச் செய்து வருகிறோம்” என்றார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், “ஓட்டோ இயக்குவதற்கான குறைந்தபட்ச வயதை 40ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். பாடசாலையை விட்டு வெளியேறிய உடனேயே ஓட்டோ வாங்கி வீதிகளில் இயக்கும் நிலை இருக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
தொழிற்கல்வியைத் தவிர்க்கும் இளைஞர்கள்
இளைஞர்கள் தொழிற்கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளைத் தெரிவுசெய்வதற்குப் பதிலாக, குறுகிய காலத்தில் வருமானம் ஈட்டக்கூடிய ஒரு வழியாக ஓட்டோ ஓட்டுநர் தொழிலைத் தெரிவு செய்வது தொடர்பில் கவலைகள் எழுந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
பாடசாலை கல்வியை நிறைவு செய்த பின்னர், திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல், நேரடியாக ஓட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபடுவதால் நாட்டின் தொழிலாளர் சந்தையில் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.
தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் முயற்சி
இலங்கையில் பல்வேறு துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முயற்சியின் ஒரு பகுதியாகவே ஓட்டோ ஓட்டுநர் தொழில் தொடர்பான வயது வரம்பை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக நலின் ஹேவஹே தெரிவித்தார்.
இளைஞர்கள் தொழிற்கல்வி, தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் இணைந்து, நாட்டில் தேவையாக உள்ள தொழில்களில் ஈடுபடுவதற்கு ஊக்குவிப்பதே இதன் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஓட்டோ ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40ஆக உயர்த்தும் முடிவு இதுவரை இறுதியாக எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பில் அரசாங்க மட்டத்தில் பரிசீலனை நடைபெற்று வருவதாகவே பிரதி அமைச்சரின் கருத்திலிருந்து தெரியவருகிறது.
இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், நாட்டில் ஓட்டோ ஓட்டுநர் தொழிலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு அது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது தொடர்பான அடுத்தகட்ட அரசாங்க நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

