Tamilnadu
oi-Velmurugan P
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே,டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய மதுக்கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இஸ்லாமியர்கள் மனு அளித்துள்ளனர்.-
புதிய டாஸ்மாக் கடைகளை எங்கு திறக்க முயன்றாலும் அதற்கு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே உள்ள மதுக்கடைகளுக்கு எதிராகவும் பெண்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு குடும்பத்தை வறுமையில் தள்ள ஒருவருக்கு மதுப்பழக்கம் இருந்தால் போதும். அதேபோல் ஒரு ஊரையே வறுமையில் தள்ள ஒரு மதுக்கடை போதும். ஒரு மதுக்கடையின் ஒரு நாள் வருமானம் என்பது அந்த சுற்றுவட்டார கிராமங்களின் மொத்த வருமானத்தில் 50 சதவீதம் அளவிற்கு கூட இருக்கும்.

சென்னை போன்ற பெருநகரங்களிலும் இதே தான் நிலைமை. மக்களை வறுமையில் தள்ளுவது ஒருபுறம் எனில், மது அருந்திவிட்டு செல்லும் நபர்கள், அந்த பாதையையே அசுத்தம் செய்வதும், அசிங்கமாக பேசுவது, குப்பைகளாக மாற்றுவது, அந்த பகுதியில் கால் வைத்தால், வாந்தி வரும் அளவிற்கு பகுதியையே மோசமாக மாற்றிவிடுவார்கள். குடிக்காதவர்களையும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கும் சூழலும் அதிகமாகவே ஏற்படுகிறது.
எனவே தான் மக்கள் மதுக்கடைகளை எந்த வடிவில் வந்தாலும் எதிர்க்கிறார்கள். ஆனால் என்ன தான் எதிர்ப்புகள் இருந்தாலும், வருமானம் கருதி மதுக்கடைளை அடைக்க அரசு தயங்குகிறது. அதேபோல் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு ஏற்படுவதால், மனமகிழ்மன்றம் என்ற பெயரில் புதிய கடைகள் ஆங்காங்கே அடிக்கடி திறக்கப்படுவதும் நடக்கிறது.
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பெருந்தோட்டம் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த கடை அமைய உள்ள இடத்திற்கு அருகே, ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் அமைந்துள்ளது.
மேலும் முழுக்க பெண்கள் பயிலும் பெண்கள் மதரஸா, இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் மற்றும் இந்து ஆலயங்கள் அமைந்துள்ளன. விதிமுறைகளை மீறி அமைக்கப்படும் டாஸ்மாக் காரணமாக தங்கள் கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாட முடியாத நிலைமை ஏற்படும் என்றும், கிராமத்தின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைய உள்ள டாஸ்மாக் கடையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இஸ்லாமியர்கள் கூறினார்கள். மேலும் ஊர் நாட்டான்மை பஞ்சாயத்தார்கள் முக்கியஸ்தர்களுடன் சென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். டாஸ்மாக் கடையை திறந்தால், அதனை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அப்போது அவர்கள் எச்சரித்தனர்.



