பரபரப்பாக டாலரில் கடன் வாங்கும் இந்திய வங்கிகள்! 1 கோடி, 2 கோடி இல்லை.. ரூ.13,000 கோடி! என்ன பண்ணப் போறாங்க?
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்க் வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து 1.45 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெற திட்டமிட்டு வருகிறது. இது இந்திய மதிப்பிற்கு பார்த்தால் சுமார் 12,800 கோடிக்கும் மேல். ஏற்கனவே ஐசிஐசிஐ பேங்க் பேங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப்பரேஷனிடம் சுமார் 1 பில்லியன் டாலர் கடன் பெற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மிசுஹோ பேங்க் லிமிடெட், மஷ்ரெக் பேங்க் பிஎஸ்சி மற்றும் யுனைடெட் ஓவர்சீஸ் பேங்க் லிமிடெட் போன்ற பிற வெளிநாட்டு வங்கிகளிடம் 1.45 பில்லியன் டாலர் கடன் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஐசிஐசிஐ பேங்க் தற்போது வாங்கும் கடனுக்கான காலம் 4 ஆண்டுகள். இதற்கு அமெரிக்க பெஞ்ச்மார்க் வட்டி விகிதமான செக்யூர்டு ஓவர் நைட் பைனான்சிங் ரேட்டோடு கூடுதலாக 1.10 அடிப்படை புள்ளிகள் சேர்த்து ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து வட்டியாக வசூலிக்கப்படும்.
இந்திய வங்கிகள் ஏன் திடீரென வெளிநாட்டு வங்கிகளிடம் கடன் வாங்குகின்றன?: சமீபத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த போர் பற்றி அனைவரும் அறிந்தது தான். இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்தது. இதை மீட்டெடுக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக ஹெட்ஜிங் காஸ்ட்டை குறைக்கும் ஒரு சிறப்பு சலுகையை அறிவித்தது.
அதாவது வெளிநாடுகளில் இருந்து கடன் பெற்று அதை இந்திய ரூபாய்க்கு மாற்றும்போது எக்ஸ்சேஞ்ச் ரேட் சற்று அதிகமாக இருக்கும். எனவே சாதாரணமாக விதிக்கப்படும் எக்ஸ்சேஞ்ச் கட்டணத்தை விட ஆண்டுக்கு 1.5% குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொள்ளும் வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொள்வதற்காக தான் இந்திய வங்கிகள் வெளிநாட்டு டாலரை நோக்கி படை எடுக்கத் தொடங்கியுள்ளன.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிஐசிஐ பேங்க் சர்வதேச கடன் சந்தையில் முதல் முறையாக நுழைந்துள்ளது. ஏனெனில் கடந்த மாதம் 1 மில்லியன் டாலர் மதிப்புலான பாண்டு பத்திரங்களை விற்பனை செய்தது.
வெளிநாடுகளில் இருந்து பெறும் கடனை வைத்து என்ன செய்வார்கள்?: இந்திய வங்கிகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் கடன்களை இந்திய ரூபாய்க்கு மாற்றி அதை இங்குள்ள பெரு நிறுவனங்களுக்கு கடனாக வழங்கும். அதே போல இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் பிசினஸ் தொடங்கும் பட்சத்தில் அவர்களுக்கு வெளிநாட்டு நாணயத்தில் கடன் தேவைப்படும். இது போன்ற சூழலில் இந்திய வங்கிகள் வைத்திருக்கும் கடனை வைத்துக்கொண்டு உடனடியாக கடன் வழங்கும். இதற்கெல்லாம் ஏற்றவாறு தற்போது ரிசர்வ் வங்கி மூன்றாண்டு கால கடனுக்கு எக்சேஞ்ச் கட்டணத்தை 1.5 சதவீதத்தில் வழங்க உள்ளதாக தெரிவித்திருப்பது வங்கிகளுக்கு ஏதுவாக மாறி உள்ளது.
