Cricket
oi-Yogeshwaran Moorthi
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் இளம் வீரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே சாய் சுதர்சன் இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் அவரது இடத்தில் சர்ஃபராஸ் கான் அல்லது ஷேக் ரஷீத் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், ஆகஸ்ட் 23ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும் நடக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இலங்கை அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.

சுப்மன் கில் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேபோல் சாய் சுதர்சனும் காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் இன்னும் ஃபிட்னஸ் சோதனையிலும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இலங்கை டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு சாய் சுதர்சன் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.
இதனால் இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகி இருக்கிறார். ஏற்கனவே இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்த பும்ரா காயம் காரணமாக விலகினார். இதனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது இடத்தில் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் களமிறங்குவார் என்று தெரிகிறது. பயிற்சி போட்டியில் சிறப்பாக ஆடிய அவர் சதம் அடித்து அசத்தி இருக்கிறார்.
இதனிடையே சாய் சுதர்சனுக்கான மாற்று வீரரை பிசிசிஐ தேர்வு செய்ய ஆலோசித்து வருகிறது. அதில் 2 பெயர்கள் பிசிசிஐ தேர்வுக் குழு பரிசீலனையில் இருக்கின்றன. அதில் சர்ஃபராஸ் கான் மற்றும் ஷேக் ரஷீத் ஆகியோரின் பெயர்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. நம்பர் 3 பேட்டிங் வரிசையில் விளையாட துருவ் ஜுரெலும் தயாராக இருக்கிறார்.
இருப்பினும் இந்திய அணியின் பும்ரா, சாய் சுதர்சன், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்சித் ராணா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் ஒரே நேரத்தில் காயம் அடைந்து ஓய்வுக்கு சென்றிருப்பது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் கேப்டன் சுப்மன் கில்லுக்கு சவால் அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.



