செப்டெம்பர் மாத இறுதி என்பது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடுவே தவிர, அது சேவையைத் தொடங்கும் திகதி அல்ல என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் மொபைல் எண் மாற்றும் வசதி (Mobile Number Portability) சேவை வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படாது என்று அரசாங்கம் உத்தியோகபூர்வமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு வெளியான ஊடக அறிக்கைகளைத் திருத்தி, இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இச்சேவையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL), அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செப்டெம்பர் மாத இறுதி என்பது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடுவே தவிர, அது சேவையைத் தொடங்கும் திகதி அல்ல என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செப்டெம்பர் இறுதிக்குள் ஓர் உடன்பாட்டை எட்டத் தவறினால், இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் TRCSL உரிய ஒழுங்குமுறை உத்தரவை பிறப்பிக்கும்.
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த வசதியை விரைவில் அறிமுகப்படுத்த அரசாங்கம் உறுதியாக உள்ளதோடு, உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது, வாடிக்கையாளர்கள் தங்களது தற்போதைய மொபைல் இலக்கத்தை மாற்றாமலேயே தங்களுக்கு விருப்பமான வேறு ஒரு சேவை வழங்குநருக்கு மாற வழிவகை செய்கிறது.
இதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளை TRCSL 2020ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


