Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சுவார்த்தையில் கேகேஆர் அணியும் மும்முரமாக உள்ளது. கேகேஆர் அணி தரப்பில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக கேமரூன் க்ரீன் மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோரை கொடுக்க முன் வந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் மும்பை அணி நிர்வாகம் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.
மும்பை அணிக்கும், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இடையிலான உறவு முடிவுக்கு வருவது உறுதியாகிவிட்டது. கடந்த சீசனின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்துவிட்டு மும்பை அணியை பலப்படுத்தும் முடிவுக்கு அந்த அணி நிர்வாகம் வந்துவிட்டது.

ஹர்திக் பாண்டியா போன்ற ஆல்ரவுண்டருக்கு ஏலத்தில் மிகப்பெரிய கிராக்கி இருக்கும் என்பதால், மும்பை அணி டிரேட் செய்ய விரும்புகிறது. இதனால் ஹர்திக் பாண்டியாவின் டிரேட் ரகசியத்தை வெட்ட வெளிச்சமாகவே வைத்திருக்கிறது. இதனால் அத்தனை அணி நிர்வாகங்களும் ஹர்திக் பாண்டியாவை வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கின்றனர்.
அதில் சிஎஸ்கே அணி ஒரு பக்கம் சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் ஆகிய இருவரையும் கொடுக்க முன் வந்திருக்கிறது. இவர்கள் இருவருமே இந்திய வீரர்கள் என்பதோடு, மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா மற்றும் போல்ட் ஆகிய இருவருக்கும் சரியான மாற்று வீரர்கள். மும்பை அணியிலும் பேட்டிங் வலுவாகவே இருக்கிறது. ஆனால் பவுலிங்கில் பும்ராவை தவிர வேறு யாரும் அச்சுறுத்தும் அளவிற்கு இல்லை.
இதனால் போல்ட் இடத்தில் கலீல் அஹ்மத் வந்தால், பவர் பிளே ஓவர்களில் சாதிக்க முடியும். ஆனால் டெல்லி, ராஜஸ்தான் போன்ற அணிகளுக்கு ஹர்திக் பாண்டியாவை விட்டுக் கொடுக்க மும்பை அணி தயாராக இல்லை. ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வாலை விட்டு கொடுக்க முன் வந்த போதும், அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் ராஜஸ்தான் அணி வீழ்த்த முடியாத அணியாக மாறிவிடும்.
இதனிடையே கேகேஆர் உடனான பேச்சுவார்த்தையிலும் மும்பை அணி ஆர்வம் காட்டி இருக்கிறது. கேகேஆர் அணியில் இருந்து கேமரூன் க்ரீன் மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோரை கேட்டுள்ளது. இதற்கு கேகேஆர் அணி சம்மதித்திருந்தாலும், இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் ஐபிஎல் ரிடென்ஷன் பட்டியல் வெளியாகும் வரை மும்பை அணி இறுதி முடிவை எடுக்காது என்று பார்க்கப்படுகிறது.


