ஃபார்முலா 1, அக்டோபர் மாதம் சிப்பாங் அனைத்துலக சர்க்யூட்டிற்கு (SIC) மீண்டும் திரும்புகிறது எனவும் இதனை மலேசியா பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸை நடத்தவுள்ளதாக அறியப்படுகிறது. இறுதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதைப் பொறுத்து இது அமையும் என்று ஃபார்முலா 1-இன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் அறிவித்துள்ளது.
மேலும், இந்தப் பந்தயம் அதிகாரப்பூர்வமாக “ஃபார்முலா 1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் இன் மலேசியா” என்று பெயரிடப்பட்டு, அக்டோபர் 2 முதல் 4 வரை நடைபெறும் என்றும் அது கூறியுள்ளது. அதிகரித்த புரவலர் செலவுகள் மற்றும் உரிமக் கட்டணங்கள் காரணமாக பந்தயப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, 1999 முதல் 2017 வரை SIC மலேசிய கிராண்ட் பிரிக்ஸை நடத்தியது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ மோதல் காரணமாக பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபிய பந்தயங்கள் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஃபார்முலா 1 பந்தயப் பட்டியலில் மலேசியா இடம்பெறுவது குறித்த யூகங்கள் எழுந்தன. தனித்தனியாக, பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை நடத்துவதற்கு மலேசியாவின் மீது நம்பிக்கை வைத்ததற்காக, பஹ்ரைனின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான சல்மான் பின் ஹமத் அல்-கலீஃபாவுக்கும், F1 தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்டெஃபானோ டொமெனிகாலிக்கும் பிரதமர் அன்வர் இப்ராஹிம் நன்றி தெரிவித்தார்.
உலகெங்கிலும் இருந்து பயணம் செய்யும் அணிகளுக்கும் ரசிகர்களுக்கும் நாட்டின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, செயல்பாட்டுச் சிறப்பு மற்றும் தனித்துவமான விருந்தோம்பலை வெளிப்படுத்த மலேசியா ஆவலுடன் காத்திருப்பதாக அன்வர் மேலும் கூறினார். “இந்த ஒத்துழைப்பு ஒரு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வை நடத்துவதை விட மேலானது. இது மலேசியாவுக்கும் பஹ்ரைனுக்கும் இடையிலான நீடித்த நட்பு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் நெருங்கிய கூட்டாண்மையைப் பிரதிபலிப்பதோடு, முக்கிய அனைத்துலக நிகழ்வுகளை நடத்துவதற்கான மலேசியாவின் தயார்நிலையையும் திறனையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. F1, FIA (சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு), அணிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை மீண்டும் செபாங்கிற்கு வரவேற்க மலேசியா தயாராக உள்ளது.
The post மீண்டும் மலேசியாவிற்கு திரும்பும் ஃபார்முலா 1 appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.
