அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உடனடி அழைப்பு இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகளை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எல்ல, கரந்தகொல்ல பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றுக்கு, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தமைக்காக பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் 10 இலட்சம் (1 மில்லியன்) ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகள், நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இந்த விடுதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடந்த 10ஆம் திகதி அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது, குறித்த விடுதியில் கட்டுப்பாட்டு விலையை மீறி குடிநீர் விற்பனை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கு, கடந்த 22ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விடுதி நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது. அதனைத் தொடர்ந்தே நீதிமன்றம் இந்த அபராதத் தொகையை விதித்தது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறும் வகையில் செயற்படும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் குறித்து, அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உடனடி அழைப்பு இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகளை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

