International
oi-Nantha Kumar R
டாக்கா: வங்கதேச ஜனாதிபதியாக செயல்பட்டு வந்த முகமது சகாபுதீன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தீவிர ஆதரவாளரான முகமது சகாபுதீனுக்கும், தற்போதைய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கும் மோதல் இருந்த நிலையில் தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

வங்கதேசத்தில் தற்போது பிஎன்பி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்த கட்சியின் தலைவராக இருக்கும் தாரிக் ரஹ்மான் தான் பிரதமராக உள்ளார். இவர் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் ஆவார்.
இருப்பினும் கூட வங்கதேசத்தில் ஜனாதிபதியாக முகமது சகாபுதீன் செயல்பட்டு வந்தார். இவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்தவர். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி நடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் போட்டியின்றி முகமது சகாபுதீன் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்.
முகமது சகாபுதீன் 2028 ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக செயல்பட முடியும். ஆனால் பதவி முடிய 2 ஆண்டுகள் மீதம் உள்ள நிலையில் இன்று முகமது சகாபுதீன் தனது ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கான கடிதத்தை அவர் நாடாளுமன்ற சபாநாயகர் ஹபிசுத்தீன் அகமதுவிடம் வழங்கி உள்ளார். அதில், ”தனக்கு 76 வயது ஆகிறது. உடல் ரீதியாக சில பிரச்சனைகள் உள்ளன. இதனால் பதவி விலகுகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஆனால், உண்மையிலேயே அவரது ராஜினாமாவின் பின்னணியில் பிரதமர் தாரிக் ரஹ்மான் உடனான மோதல் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், முகமது சகாபுதீன், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர். அவரது கட்சியை சேர்ந்தவர். ஷேக் ஹசீனாவின் கட்சியும், பிரதமர் தாரிக் ரஹ்மானின் கட்சியும் அரசியலில் பரம எதிரிகளாக இருக்கின்றன.
இப்படி இருக்கும்போது ஷேக் ஹசீனாவின் ஆதரவாளரான தாரிக் ரஹ்மானை நாட்டின் உயரிய பொறுப்பான ஜனாதிபதி அந்தஸ்தில் வைத்து பார்க்க தாரிக் ரஹ்மான் விரும்பவில்லை. இதனால் இருவருக்கும் சில விஷயங்களில் கருத்து மோதல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி முகமது சகாபுதீன் தனது ஜனாதிபதி பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

