இதன் வரலாற்றுப் பின்னணியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சர்வாதிகாரி ஜெனரல் பிராங்கோவின் ஆட்சியில்(1939–1975), காத்தலோனியா மொழியைப் பொதுவெளியில் பேசுவது தடை செய்யப்பட்டதுடன் ஸ்பானிஷ் மொழி கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. 1936-ஆம் ஆண்டு பார்சிலோனா கிளப்பின் தலைவர் ஜோசப் சுன்யோல் பிராந்திய மொழி அடையாளத்தை முன்னிறுத்தியதற்காகவே சுட்டுக்கொல்லப்பட்டார். அத்தகைய அடக்குமுறைக் காலங்களில், பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்சிலோனா மைதானத்திற்குள் (Camp Nou) திரண்டு தங்களது தாய்மொழியை உரக்கப் பாடித் தங்கள் அடையாளத்தைக் காத்தனர். இதனால்தான், பார்சிலோனா அணியினர் தங்களை “வெறும் கிளப் அல்ல, அதையும் தாண்டியது” (More than a club) என்று ஒரு போராட்ட அடையாளமாகப் பிரகடனப்படுத்திக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் நிகழ்ந்த 1938ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டங்களும், பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்த நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டங்களும் காத்தலோனியா மக்களின் மொழி உரிமைப் போராட்டங்களோடும் காளை விளையாட்டுகளோடும் ஓர் அசாத்தியமான பண்பாட்டு ஒற்றுமையைக் கொண்டுள்ளன.


