Last Updated:
மனுதாரர் அபிஜீத் திப்கே சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அகில் சிபல், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பதிவுகள் அனைத்தும் வெறும் அரசியல் நையாண்டி மட்டுமே என்று கூறினார்
சமூகவலைதளங்கள் மூலம் உருவான கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பின் எக்ஸ் பக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே, தனது எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விசாரித்தார். அப்போது, கரப்பான் பூச்சி ஜனதா அமைப்பின் சில கருத்துக்கள், நீட் தேர்வுக்காக காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தையும் தேவையற்ற பயத்தையும் உருவாக்கும் வகையில் அமைந்திருந்ததாக மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
தற்போது நீட் மறுத் தேர்வு முடிவடைந்துவிட்டதால், இந்த கணக்கை மீண்டும் செயல்படுத்துவதில் அரசுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறினார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, நீட் தேர்வு முடிந்துவிட்டதால், கரப்பான் பூச்சி ஜனதாவின் எக்ஸ் தள கணக்கை முடக்கிய உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டார்.
முன்னதாக, மனுதாரர் அபிஜீத் திப்கே சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அகில் சிபல், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பதிவுகள் அனைத்தும் வெறும் அரசியல் நையாண்டி மட்டுமே என்று கூறினார். அதிகாரிகளுக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பதிவு ஆட்சேபனைக்குரியதாக இருந்தால், அந்தப் பதிவை மட்டுமே நீக்கியிருக்க வேண்டும். அதை விடுத்து ஒட்டுமொத்த கணக்கையுமே முடக்கியது தவறு என்றும் வாதிட்டார்.


