ஈரானில் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டு 4 மாதங்களுக்கு பின் இறுதி சடங்குகள் நடப்பது ஏன்?
ஈரானில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் அந்நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டு இந்த படுகொலையை நிகழ்த்தின. இதனால் ஈரானே கொதித்தெழுந்தது. பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் அயத்துல்லா அலி கமேனி. அவரது மரணம் ஈரான் மக்களால் ஏற்று கொள்ள முடியாத ஒரு நிகழ்வாக மாறியது.
அயத்துல்லா அலி கமேனி மரணமடைந்து 4 மாதங்களாகியும் அவ்ருக்கு இறுதிசடங்கு நிகழ்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. அடுத்தடுத்த தாக்குதல்கள், தலைவர் பற்றிய குழப்பங்கள் மற்றும் திடீரென லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தால் அவர்களை ஒருங்கிணைக்க முடியாமல் போனால் கூட்ட நெரிசல் பிரச்சினை ஏற்படும் என்பன உள்ளிட்ட காரணங்களால் தள்ளி போடப்பட்டது.

தற்போது போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. போர் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டிருந்த இந்த இறுதிச் சடங்குகள் தற்போது ஏழு நாள் நிகழ்வுகளாக நடைபெற்று வருகின்றன.
இதன் படி ஜூலை 9 வரை ஏழு நாட்களுக்கு இந்த இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெஹ்ரான், கோம் உள்ளிட்ட ஈரானின் முக்கிய நகரங்களிலும், அண்டை நாடான ஈராக்கின் நஜாஃப் மற்றும் கர்பலா நகரங்களிலும் அஞ்சலி ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. இறுதியாக, அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெஸா நினைவிடத்தில் ஜூலை 9 அன்று உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் சுமார் 20 மில்லியன் மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில், ஈரானிய மக்கள் தங்கள் தலைவருக்கு அளிக்கும் இந்த பிரம்மாண்டமான அஞ்சலி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஒரு வலுவான நிலைப்பாடாகவும், ஈரான் அரசின் மீதான மக்கள் ஆதரவின் வெளிப்பாடாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட சுமார் 40 நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனீர் உள்ளிட்டோரும் டெஹ்ரான் சென்றுள்ளனர். பொதுமக்கள் திரளாக வருகை தருவார்கள் என்பதால் இங்கே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து அவரது மகன் மொஜ்தபா கமேனி நாட்டின் தலைவராக பொறுப்பேற்றாலும், போர் சூழல் காரணமாக அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. இறுதிச்சடங்கில் அவர் தோன்றுவார் என்றும், ஈரானின் தற்போதைய ஆட்சியின் நிலைத்தன்மையை உலகுக்கு உணர்த்தும் ஒரு நிகழ்வாக இதனை காட்டுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

