Last Updated:
சீனாவில் கடும் வெப்பத்தை சமாளிக்க, அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து செயற்கையாக நீர் தெளிக்கும் ‘ரூஃப்டாப் ரெயின்’ முறை அறிமுகம்.
சீனாவில் கடும் வெப்பத்தை சமாளிக்கும் வகையில், அடுக்குமாடி கட்டிடங்களின் மேற்கூரையில் இருந்து செயற்கையாக நீர் தெளிக்கும் ‘ரூஃப்டாப் ரெயின்’ முறை கவனம் ஈர்த்துள்ளது.
உலகம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான வெப்ப அலைகள் வீசி வரும் நிலையில், தங்களது நகரங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க பல்வேறு நாடுகள் புதிய தீர்வுகளை ஆராயத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், சீனாவில் வெயில் காலங்களில் வெளிப்புற வெப்பநிலையை குறைப்பதற்காக, அங்குள்ள வானளாவிய உயரமான கட்டிடங்களின் கூரைகளில் ‘மிஸ்ட் கூலிங்’ அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.
இதற்காக உயரமான கட்டிடங்களின் உச்சியில் பிரத்யேக முனைகள் பொருத்தப்பட்டு, வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் அவற்றின் வழியே மிக நுண்ணிய நீர்த்துளிகள் பனிமூட்டம் போல வெளிப்புறக் காற்றில் தெளிக்கப்படுகின்றன.
இது காற்றில் உள்ள வெப்ப ஆற்றலை உறிஞ்சிக்கொண்டு, அந்த பகுதியின் ஒட்டுமொத்த வெப்பநிலையைக் குறைக்கிறது. இவ்வாறு தெளிக்கப்படும் நீர்த்துளிகள் தரையை வந்தடைவதற்கு முன்பே காற்றில் ஆவியாகிவிடுவதால், தரையோ அல்லது கட்டடங்களின் மேற்பரப்போ நனைவதில்லை. இந்த ‘மிஸ்ட் கூலிங் சிஸ்டம்’ மூலம் அந்த பகுதியின் வெப்பநிலையைச் சுமார் 14 டிகிரி பாரன்ஹீட் வரை குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சீனாவின் ஜின்ஹுவாவில் உள்ள யிவு சர்வதேச வர்த்தக சந்தையில் தண்ணீர் தெளிப்பான் மற்றும் விசிறி பொருத்தப்பட்ட குடைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு இந்த நவீன குடைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
Chennai,Tamil Nadu
Jul 03, 2026 10:43 AM IST


