Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி இதுவரை ஆடியுள்ள 5 நாக் அவுட் போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்கள் விளாசி இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வைபவ் சூர்யவன்ஷி ஒரு நாக் அவுட் ஸ்பெஷலிஸ்ட் என்று பாராட்ட தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்து இந்திய ஏ அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் இந்திய அணிக்காக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு, 29 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் தடுமாறினார். 4 போட்டிகளில் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 117 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தற்போது ஒரே போட்டியில் 94 ரன்கள் விளாசி அசத்தி இருக்கிறார். அதேபோல் வைபவ் சூர்யவன்ஷிக்கு நாக் அவுட் போட்டி என்றாலே, உற்சாகம் பிறந்துவிடுகிறது.
ஏனென்றால் இந்த ஆண்டில் மட்டும் 5 நாக் அவுட் போட்டிகளில் விளையாடி ஒரு மற்றும் 4 அரைசதங்களை விளாசி இருக்கிறார். அதாவது 5 போட்டிகளில் விளையாடி 530 ரன்களை விளாசி இருக்கிறார். யு19 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 68 ரன்கள் எடுத்து அசத்தினார்.
தொடர்ந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 175 ரன்களை குவித்து வரலாறு படைத்தார். ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 97 ரன்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, குவாலிஃபையர் 2வது போட்டியில் 47 பந்துகளில் 96 ரன்களை விளாசி அசத்தினார்.
தற்போது முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் 29 பந்துகளில் 94 ரன்களை விளாசி ருத்ர தாண்டவம் ஆடி இருக்கிறார். பிக் மேட்ச்களில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் உச்சத்தில் இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் 15 வயதில் வைபவ் சூர்யவன்ஷி இப்படி பொறுப்பேற்று ஆடுவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

