சென்னை,சட்டமன்ற நேரலை குறித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகருக்கு இன்று (20.06.2026) கடிதம் எழுதி உள்ளார்.
இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
பேரவை தலைவர் அவர்களுக்கு, வணக்கம்,
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் கவர்னர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதைத் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.
கவர்னர் உரை மீதான விவாதம்
“கொடுத்த வாக்கைக் காப்பாற்றியுள்ளார் முதல்-அமைச்சர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு” என அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டு சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
நேற்றைய தினம் (19.06.2026) மேகதாது அணை கட்டுவதை கண்டித்து முதல்-அமைச்சர் கொண்டு வந்த அரசினர் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேரலை செய்யப்பட்டன. அடுத்து, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டது. கவர்னர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில் அவை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. கவர்னர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை.



