Last Updated:
ஆண்கள் யாருடனாவது பேசிவிட்டால் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
மும்பையில் திருமணமான 48 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்தது குடும்பத்தினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகேயுள்ள அம்பர்நாத் பகுதியைச் சேர்ந்தவர் நிதின் தில்கர். மருத்துவரான இவருக்கு 26 வயதான விசாகா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. திருமணத்துக்கு முன்பு இளம்பெண்ணிடம் இனிக்க இனிக்க பேசிய டாக்டர், தாலி கட்டியதும் தனது உண்மையான முகத்தை காட்டியுள்ளார்.
ஆரம்பத்தில் கணவன் மட்டும் தான் மாறியிருக்கிறார் என்று விசாகா நினைத்துள்ளார். ஆனால், மாமியார், கொழுந்தனார் என அனைவரும் கொடுமைப்படுத்தியுள்ளனர். நாட்கள் செல்ல செல்ல “வீட்டில் இருந்து கூடுதல் தங்க நகை வாங்கி வா, பணம் வாங்கி வா” என்று மாமியார் குடைச்சல் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் இது சாதாரண பிரச்சனை தான் என நினைத்து இளம்பெண் அதை கடந்து சென்றுள்ளார். இருந்தபோதும் டாக்டர் கணவன் கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் விபரீத முடிவு எடுக்கும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளார்.
கட்டிய மனைவி 24 மணி நேரமும் தனது கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்ற குறுகிய புத்தியால் வீட்டிற்கு உள்ளேயேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்களை பொறுத்தியுள்ளார். அதன்மூலம் தொடர்ந்து மனைவியை கண்காணித்து தொட்டதெற்கெல்லாம் குறை கண்டுபிடித்து துன்புறுத்தியிருக்கிறார். அதிலும், ஆண்கள் யாருடனாவது பேசிவிட்டால் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் உள்ள இளைஞருடன் ஏதே தகவல் கேட்பதற்காக பேசியுள்ளார்.
அதை பார்த்ததும் பணி முடிந்து வீடு திரும்பிய நிதின் கடுமையாக தாக்கியுள்ளார். டாக்டர் கணவன் ஊசி குத்துவது போன்று அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்துவது தொடர் கதையாகியுள்ளது. சிசிடிவி கண்காணிப்பிலேயே இருந்ததால் விசாகாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் கடுமையாக பாதித்துள்ளது. இதனால், உடல் அளவிலும் மனதளவிலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். புகுந்த வீட்டில் தான் சந்திக்கும் கொடுமை குறித்து பெற்ற தாயிடம் கூறி இளம்பெண் கண்ணீர் சித்தியுள்ளார்.
டாக்டர் மாப்பிள்ளை என்று தனது மகளை அதலபாதாளத்தில் தள்ளிவிட்டதை எண்ணி பெண் வீட்டார் ரத்தக் கண்ணீர் சிந்தியுள்ளனர். இதையடுத்து இரண்டு நாட்களில் அங்கிருந்து விசாகாவை அழைத்து வருவதாக உறுதியளித்துள்ளனர். அதற்குள், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் வீட்டில் இருந்து தகவல் வந்துள்ளது. அதைக் கேட்டு அவரின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். பின்னர், தங்களது மகளை கொடுமைப்படுத்தியது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின்பேரில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் நிதின், மாமியார் மற்றும் கொழுந்தனார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து நிதினை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்ற இருவரையும் பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர். கட்டிய மனைவியை 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் கண்காணித்து டார்ச்சர் செய்த டாக்டர் கணவரால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் திருமணமான 48 நாட்களுக்குள் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mumbai,Maharashtra
24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு.. திருமணமான 48 நாட்களில் இளம்பெண் விபரீத முடிவு.. என்ன நடந்தது?


