India
oi-Vigneshkumar
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மணல் கொள்ளை தகராறில் பாஜக பிரமுகர் கார் வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது காரை முன்னும் பின்னும் லாரி லாக் செய்த நிலையில், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரத்தில் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. மணல் குவாரி தொடர்பான ஏற்பட்ட பகை, ஒரு நள்ளிரவில் மூன்று உயிர்களைப் பலிவாங்கியுள்ளது.

என்ன நடந்தது
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, கொரியா மாவட்டத்தின் சோன்ஹாட் என்ற பகுதியில் உள்ள நௌகாயின் கிராமத்தில் தான் இந்தத் துயரம் நிகழ்ந்தது. பாஜக பிரமுகரும், முன்னாள் ஜனபத் பஞ்சாயத்துத் தலைவருமான பாரத் சிங் என்கிற லல்லா சிங், மணல் குவாரி தொடர்பான ஒரு தகராறைப் பேசித் தீர்ப்பதற்காகச் சென்றிருந்தார். ஆனால், அங்கு அவருக்கு ஒரு பயங்கரமான பொறி வைக்கப்பட்டிருந்தது. பாரத் சிங் பயணம் செய்த பார்ச்சூனர் காரை முன்னும் பின்னும் லாரிகளை நிறுத்தி வழிமறித்துள்ளனர். தப்பிக்க வழியில்லாத நிலையில், கார் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டது.
மூன்று பேர் பலி
இந்தக் கொடூர சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.. பாஜகவின் பாரத் சிங் காரின் உள்ளேயே உடல் கருகி உயிரிழந்தார். படுகாயமடைந்த வீரேந்திர சிங் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல பாரத் சிங்கின் உறவினரான நாகேந்திர சிங்கும் இதில் பலியானார். மேலும், மயங்க் சிங் என்பவர் பலத்த காயங்களுடன் பிலாஸ்பூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குத் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மணல் குவாரி யாருக்கு என்பதில் நிலவி வந்த போட்டியே இந்த வன்முறைக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. பாரத் சிங்கின் குடும்பம், மனோஜ் திரிபாதியின் குடும்பத்தினருக்கும் இடையே மணல் குவாரி தொடர்பாக பகை இருந்து வந்துள்ளது. இந்த மனோஜ் திரிபாதியும் உள்ளூர் பாஜக பிரமுகர் தான்.
மோதலுக்குக் காரணம்
அந்தப் பகுதியில் மணல் குவாரி ஒப்பந்தம் பாரத் சிங்கின் குடும்பத்திற்குக் கிடைத்துள்ளது. ஆனால், மணலை ஏற்றிச் செல்லும் லாரிகள் திரிபாதி குடும்பத்திற்குச் சொந்தமானவை. மணலை எடுத்துச் செல்வது, அதற்கான கட்டணம் மற்றும் சோன்ஹாட், கைலாஷ்பூர், டெலிமுடா போன்ற பகுதிகளில் மணலை எடுக்கப் போவது யார் என்பதில் கடந்த சில மாதங்களாகவே இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்துள்ளது. சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, மயங்க் சிங் என்பவர் திரிபாதி குடும்பத்தினரைத் தாக்கியதாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுவே தற்போது கொலையில் முடிந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை இதுவரை அக்ஷத் திரிபாதி, விஷால் திரிபாதி, சத்யபிரகாஷ் திரிபாதி, மன்னு திரிபாதி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மொத்தம் 9 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
யார் இவர்
கொல்லப்பட்ட பாரத் சிங் ஒரு செல்வாக்குமிக்க நபர். முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், பூபேஷ் பாகல் ஆட்சியின் போது பாஜகவில் இணைந்தார். அவர் எப்போதும் தனது பார்ச்சூனர் காரில் ஹூட்டர் சத்தத்துடன் வலம் வருவார் என்றும், அந்த பகுதியில் மணல் தொழில் முழுக்க முழுக்க இவரது கண்ட்ரோலில் தான் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும், இதில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாரத் சிங்கின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
கண்டனம்
உள்ளூர் எம்.எல்.ஏ பையாலால் ராஜ்வாடே இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். கொரியா மாவட்ட வரலாற்றிலேயே இவ்வளவு கொடூரமான சம்பவம் நடந்ததில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளனர்.தற்போது அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மணல் மாஃபியாக்களின் மோதல் மூன்று உயிர்களை பறித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

