பிஎம் கிசான்: விவசாயிகளுக்கு குட் நியூஸ்! ரூ.2,000 வரப்போகுது! ஜூன் 20 அன்று ரிலீஸ் செய்கிறார் பிரதமர் மோடி!
நாட்டில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு உதவுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-கிசான்) திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தகுதியுள்ள விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை விவசாயிகள் விதைகள், உரங்கள் வாங்குவதற்கும், விவசாயம் சார்ந்த பிற செலவு செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ரூ.6,000 நிதியுதவி ஒரே தவணையாக வழங்கப்படுவதில்லை. 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. ரூ.2,000 வீதத்தில் 3 முறை விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. இதுவரையில் 22 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 23-வது தவணையை 2026-ஆம் ஆண்டின் ஜூன் 20-ஆம் தேதி அன்று மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள தாரகேஸ்வர் நகரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடவுள்ளார்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் நிதியுதவி பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 20-ஆம் தேதி அன்று 9.44 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.2,000 வழங்கப்பட இருக்கிறது. இதில் பெண் விவசாயிகளும் அடங்குவர். பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 2.18 கோடிக்கும் அதிகமான பெண் விவசாயிகள் நிதியுதவி பெற்றுவருகின்றனர்.

23-வது தவணையின் மூலம் மொத்தம் ரூ.18,880 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற உன்னத நோக்கில் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிஎம் கிசான் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதிலிருந்து இன்று வரை விவசாயிகளுக்கு மொத்தமாக ரூ.4.46 லட்சம் கோடியை தாண்டி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
23-வது தவணை தொகையை வெளியிட ஜூன் 20-ஆம் தேதி என்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி, மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன் சிங், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் போன்ற முக்கிய விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
எனவே தவணைத் தொகையை பெறுவதற்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கிறது. அதற்குள் கேஒய்சி விவரங்களை புதுப்பித்த நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
