
உயிரிழந்த இளைஞன் சமூகப் பணிகளிலும் கோவில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்டத்தின் குறிசுட்டகுளம் – கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற துயரமான விபத்தில் 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் குறிசுட்டகுளம், கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் குகப்பிரியன் என்பவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை, குறிசுட்டகுளம் பகுதியில் அமைந்துள்ள காளி அம்மன் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதற்காக பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உழவு இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த இளைஞன் எதிர்பாராத விதமாக அதன் இயந்திரப் பகுதிக்குள் தவறி விழுந்துள்ளார். இதனால் இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞன் சமூகப் பணிகளிலும் கோவில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கனகராயன்குளம் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர். பின்னர் சடலம் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

