அடுத்த ஜொகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேசனல் அனைத்து 56 மாநிலத் தொகுதிகளிலும் போட்டியிடும் என்று ஜொகூர் பிஎன் தலைவர் ஒன் ஹஃபீஸ் காசி தெரிவித்துள்ளார்.
ஜொகூர் மந்திரி பெசாருமான ஒன் ஹபீஸ், ஜொகூர் மக்களின் கருத்துகள் மற்றும் விருப்பங்களையும், மாநிலத்தில் உள்ள அம்னோ மற்றும் பிஎன் அடிமட்டத் தலைவர்களின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அனைத்து 56 மாநிலத் தொகுதிகளிலும் போட்டியிடும் இந்த முடிவு, மாநிலத்தின் வளர்ச்சிக்கும் ‘பாங்சா ஜொகூர்’ மக்களின் நலனுக்கும் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிலையான மற்றும் வலுவான அரசாங்கத்தை தொடர்ந்து அமைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தற்போது கூட்டரசு அளவில் இணைந்து செயல்பட்டு வரும் பாரிசான் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் ஆகிய கூட்டணிகளுக்கு இடையே ஏற்படக்கூடிய சாத்தியமான ஒத்துழைப்பு குறித்து, குறிப்பாக அடுத்த ஜொகூர் தேர்தலுக்கு முன்னதாக உள்ள அரசியல் சூழல் பற்றிய ஊகங்களை இவரது இந்த அறிவிப்பு மேலும் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்பாக தேர்தல் நடத்தப்படாவிட்டால், ஜொகூர் மாநில சட்டமன்றம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தானாகவே கலைக்கப்படும், அதன்பின்னர் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கடந்த 2022 மார்ச் மாதம் நடைபெற்ற ஜொகூர் மாநிலத் தேர்தலில், மொத்தம் உள்ள 56 இடங்களில் 40 இடங்களைக் கைப்பற்றி பிஎன் மாநில அரசாங்கத்தை அமைத்தது.
அத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் 12 இடங்களையும், பெரிகாத்தான் நேஷனல் மூன்று இடங்களையும், மூடா (Muda) ஒரு இடத்தையும் கைப்பற்றின.
பாரிசான் கூட்டணி தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தனது பலத்தை சோதித்துப் பார்ப்பதற்கான சிறந்த தளமாக ஜொகூர் மாநிலத் தேர்தல் அமையும் என்று முன்னாள் அம்னோ இளைஞர் அணித் தலைவர் கைரி ஜமாலுதீன் இன்று காலை கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜொகூர் அரசாங்கம் ஒரு ஒற்றுமை அரசாங்கமாக அமைக்கப்படவில்லை என்றும், மாறாக அது தனது தற்போதைய மக்கள் ஆணையைப் பாதுகாக்க விரும்பும் ஒரு பாரிசான் தலைமையிலான நிர்வாகம் என்பதைக் கருத்தில் கொண்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்று வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் பலத்தை மதிப்பிட உதவும் என்று முன்னாள் சுகாதார அமைச்சருமான அவர் தெரிவித்தார்.
சமீபகாலமாக ஜொகூர் அம்னோவிற்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனத்திற்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் பக்காத்தான் ஹராப்பானின் பிரச்சாரம் வெறும் அரசியல் வித்தை தவிர வேறொன்றுமில்லை என்று ஜொகூர் அம்னோ விவரித்துள்ளது.
-fmt
