Last Updated:
பிறப்பு விகிதம் குறைவதால், எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தவும், மக்கள் தொகையை முறைப்படுத்தவும் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு புதிய அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளார்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரஸன்னபேட்டையில் நடைபெற்ற ‘ஸ்வர்ண ஆந்திரா, ஸ்வச் ஆந்திரா’ தூய்மைப் பணி பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் சந்திபாபு நாயுடு, குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு ரூ. 30,000 மற்றும் நான்காவது குழந்தையாகப் பிறக்கும் குழந்தைக்கு ரூ. 40,000 நிதியுதவி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்த முழுமையான விவரங்கள் மற்றும் அரசாணை அடுத்த ஒரு மாதத்திற்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவையில் அரசு பரிசீலித்து வந்தது. ஆனால், தற்போது இந்த நிதியுதவி முறையை மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் குடும்பங்களுக்கும் விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
வருமானம் அதிகரிக்கும் போது பல தம்பதியினர் ஒரே ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அல்லது முதல் குழந்தை ஆணாக இல்லாத பட்சத்தில் மட்டுமே இரண்டாவது குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். இதனால் ஆந்திர மாநிலத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் சரிந்து வருகிறது.
பிறப்பு விகிதம் குறைவதால், எதிர்காலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், தென்னிந்தியாவில் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதால், எதிர்காலத்தில் மக்கள் தொகை அடிப்படையில் நடக்கும் தொகுதி மறுசீரமைப்பின் போது, நாடாளுமன்றத்தில் தென்னக மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் இடங்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்ற அரசியல் ரீதியான கவலையையும் அவர் கடந்த காலங்களில் வெளிப்படுத்தியுள்ளார். 3 ஆவது மற்றும் 4 ஆவது குழந்தையை பெற்றுக் கொள்வோருக்கு ஆந்திர முதல்வர் அறிவித்துள்ள ஊக்கத்தொகை தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
3-வது குழந்தைக்கு ரூ. 30,000, 4-வது குழந்தைக்கு ரூ. 40,000 ஊக்கத்தொகை – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

