Last Updated:
அண்ணா நகர் டவர் பூங்காவிற்கு வரும் மக்களின் அதிகாலை பொழுதை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொண்டிருக்கிறார் இவர். இது குறித்து பேசும் ஐஸ்வர்யா
சமீப காலமாக நகரங்களிலும் கிராமங்களிலும் வேகமாக பரவி வரும் புதிய உணவு போக்காக “தேங்காய்ப்பால் வியாபாரம்” மாறியுள்ளது. தெருவுக்கு ஒரு தேங்காய்ப்பால் கடை என்ற அளவுக்கு இந்த வியாபாரம் வளர்ச்சி கண்டுள்ளது.
கோயம்புத்தூரில் தொடங்கிய இந்த முயற்சி பின்னர் சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கு பரவி, தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் இந்த வியாபாரத்தை பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர் 25 வயதான ஐஸ்வர்யா.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் அவர், தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை அண்ணா நகர் டவர் பூங்காவில் தேங்காய்ப்பால் விற்பனை செய்து வருகிறார். அதிகாலை பூங்காவிற்கு வரும் மக்களுக்கு ஆரோக்கியமான பானத்தை வழங்கி வருவது இவரின் சிறப்பாகும்.
இதுகுறித்து ஐஸ்வர்யா கூறியதாவது, “ஈரோடு மற்றும் அத்தாணி பகுதிகளில் தேங்காய்ப்பால் விற்கப்படுவதை பார்த்தேன். எங்கள் வீட்டிலும் தினசரி தேங்காய் பயன்படுத்தப்படுவதால், அதனுடன் ஒரு தனிப்பட்ட நெருக்கம் இருந்தது. அதையே சென்னையில் ஒரு புதிய முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியை தொடங்கினேன்.
இப்போது சாதாரண தேங்காய்ப்பாலுடன் மட்டுமல்லாமல், சங்குப்பூ, பீட்ரூட், கேரட் போன்றவற்றின் சாறுகளைச் சேர்த்து இயற்கை நிறங்களுடன் வழங்கி வருகிறேன். ஒரு கப் ₹30-க்கும், நாட்டு சக்கரை சேர்த்தால் ₹35-க்கும் விற்பனை செய்கிறேன். இதற்காக தினமும் அதிகாலை 3 மணிக்கே எழுந்து, தேங்காய்களைத் துருவி புதிய பாலை தயாரித்து, காலை 6 மணிக்குள் பூங்காவிற்கு கொண்டு வருகிறேன். வார நாட்களில் சுமார் 25 லிட்டரும், வார இறுதிகளில் 50 லிட்டரும் விற்பனையாகிறது.
அண்ணா நகர் மக்களின் ஆதரவு மிகவும் அதிகம். ஆன்லைன் முன்பதிவு வசதியும் உள்ளது. முந்தைய நாள் இரவே 30 கப்கள் வரை ஆர்டர் கிடைத்தாலும், அடுத்த நாள் காலை டெலிவரி செய்து வருகிறேன். தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்தும் ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.
சிலர் இதை ஒரு தற்காலிக டிரெண்ட் எனக் கூறினாலும், தரம் இருந்தால் எந்த வியாபாரத்தையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற தளங்களில் இணைந்து, சென்னையின் பிற பகுதிகளிலும் அவுட்லெட்கள் தொடங்க திட்டமிட்டுள்ளேன்,” என்றார்.
ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இயற்கை பானங்களின் தேவை உயர்ந்து வருவது இந்த தேங்காய்ப்பால் வியாபார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

