மெராயா நகரில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த கெண்டைனர், சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அழுத்தம் காரணமாக நேற்று (25) அகற்றப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மக்களுக்கும் சாரதிகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்திய இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அக்கரப்பத்தனை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்களால் முதலாவது பிரேரணையாக இந்த விடயம் முன்வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளும் அதிகாரப்பூர்வ அழுத்தங்களும் இணைந்து இந்த அகற்ற நடவடிக்கையை நிகழ்த்தியுள்ளது.
குறித்த கெண்டைனர் காரணமாக மெராயா நகரில் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நீண்டகாலமாக நிலவி வந்தன. பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சாரதிகள் பலமுறை கோரிக்கை விடுத்திருந்த போதிலும், இதுவரை அது செயல்படுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில், லிந்துலை பொலிஸாரின் தலையீடு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளின் தீவிரம் காரணமாக இறுதியாக இந்த கெண்டைனர் அகற்றப்பட்டது. இது மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
கெண்டைனர் அகற்றப்பட்டதையடுத்து அங்கிருந்த மக்கள் பட்டாசு வெடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த இந்த தீர்வு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மெராயா நகரில் பொதுமக்களின் வசதியும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது.




