Last Updated:
இரண்டாவது இன்னிங்ஸில் தமிழக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணி தனது 93 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றுப் பயணத்தில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிலான ஒரு மாபெரும் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளது.
நியூ சண்டிகரின் முல்லன்பூரில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்றைக்கே ஆப்கானிஸ்தான் அணியை முற்றிலும் நிலைகுலையச் செய்ததன் மூலம், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் “மிகப் பெரிய இன்னிங்ஸ் வெற்றி” (Biggest Innings Win) என்ற புதிய சாதனையை இந்திய மண் சந்தித்துள்ளது.
இதற்கு முன்னதாக 2018-இல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே இந்தியாவின் பெரிய சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்று வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த சிறந்த பவுலராக 23 வயது இளம் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மானவ் சுதார் உருவெடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரைச் சேர்ந்த இவர், தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 10-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை மானவ் சுதார் பெற்றார்.
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த, “ரவீந்திர ஜடேஜாவின் ஓய்விற்குப் பிறகு அந்த இடத்தைப் பூர்த்தி செய்யப் போவது யார்?” என்ற முக்கியமான கேள்விக்கு, இந்த ஒற்றைப் போட்டியின் மூலம் மானவ் சுதார் விடையளித்துள்ளார். பந்தை ஒரே இடத்தில் துல்லியமாக லேண்ட் செய்யும் திறன், பந்துவீசும் வேகம் மற்றும் பிட்ச்சில் இருந்து கூடுதல் சுழலையும் பவுன்ஸையும் (Turn and bounce) எடுக்கும் அசாத்திய வித்தை என ஒரு முழுமையான சுழற்பந்துவீச்சாளராக அவர் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
முதலாவது இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்ட ஆப்கானிஸ்தான் அணி ஃபாலோ-ஆன் பெற்று விளையாடிய இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 112 ரன்களுக்கு (35.5 ஓவர்களில்) ஒட்டுமொத்தமாகச் சுருண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் தமிழக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அவருக்குத் துணையாகச் சுழலில் மிரட்டிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக இப்போட்டியில் 7 விக்கெட்டுகளை (6/33 மற்றும் 1/29) வீழ்த்திய மானவ் சுதாரின் இந்த அசாத்திய சுழற்பந்துவீச்சு ஆட்டமும், இந்திய பேட்ஸ்மேன்களின் இமாலய ரன் குவிப்பும் சேர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த 93 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றியை இந்தியாவுக்குச் சாத்தியமாக்கியுள்ளது.

