Last Updated:
இணையத்தில் வெளியாகியிருக்கும் வீடியோவால், திருப்பதி ஏழுமலையான் கோவில் பாதுகாப்பு குறைப்பாடா எனும் கேள்வி எழுந்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் திருப்பதி மலை முதலிடத்தில் இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் மத்திய மாநில உளவுத்துறைகள் ஆந்திர மாநில அரசுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கும் தகவல் தெரிவித்திருந்தன.
இந்த தகவலை தொடர்ந்து திருப்பதி மலையில் கடும் பாதுகாப்பு நெறிமுறைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் ஒவ்வொருவரும் அணு அணுவான சோதனைக்கு பின்னர் மட்டுமே மலையேறி செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல் ஏழுமலையான் கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் அனைவரும் பல கட்ட சோதனைகளை கடந்த பின் மட்டுமே வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் நுழைய முடியும்.
வைகுண்ட காத்திருப்பு மண்டபத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும்போது விமான நிலையங்களில் நடத்தப்படும் சோதனை போன்ற ஏர்போர்ட் மாடல் சோதனை பக்தர்களிடையே நடத்தப்படும். இறுதி கட்டமாக நடத்தப்படும் அந்த ஏர்போர்ட் மாடல் சோதனையைக் கடந்து ஆபத்தான பொருட்கள், செல்போன்கள் ஆகியவற்றை கோவிலுக்குள் எடுத்து செல்வது என்பது இயலாத காரியமே ஆகும்.
ஆனால் கடந்த 6ஆம் தேதி சாமி கும்பிடுவதற்காக வந்திருந்த பக்தர் ஒருவர் செல்போனுடன் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு நுழைந்து வீடியோ பதிவு செய்திருக்கிறார். சாமி தரிசன வரிசையில் பக்தர்கள் உட்கார்ந்திருப்பது சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது ஆகியவை உள்ளிட்ட காட்சிகளை வீடியோ பதிவு செய்திருக்கிறார்.
அந்த காட்சிகளை அந்த பக்தர் சமூக ஊடகங்களில் தவறாமல் பதிவேற்றமும் செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அந்த பக்தர் செல்போனுடன் கோவிலுக்குள் நுழைந்து இருக்க வேண்டும் என்று கருதப்படும் நிலையில் அவர் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்த காட்சிகள் ஏழுமலையான் கோவிலுக்கு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பெரிய ஓட்டை இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இதனால் தேவஸ்தான அதிகாரிகள், ஏழுமலையான் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் அதிகாரிகள் ஊழியர்கள் ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


