India
oi-Halley Karthik
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தார் பாலைவனப்பகுதியில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, 2.8 கி.மீ நீள செயற்கை ஏரி உருவாக்கப்பட்டிருக்கிறது. இது சுமார் 50 லட்சம் மக்களின் தாகத்தை தீர்க்கும்.
ராஜஸ்தான் என்றாலே உடனே நினைவுக்கு வருது கடல் போல் பரந்து கிடக்கும் மணலும், ஒட்டகங்களும்தான். இப்பேற்பட்ட பாலைவனப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதுசரி சென்னையிலேயே குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது ராஜஸ்தானில் ஏற்படாதா என்ன?

50 லட்சம் மக்கள்
குடிநீர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 50 லட்சம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவும் பெரியதாக கை கொடுக்கவில்லை. இப்படி இருக்கையில்தான் செயற்கை ஏரியை உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன.
பாலைவன ஏரி
வழக்கமாக பாலைவனத்தில் ஏரிகள் இருந்தால், அதில் இருக்கும் நீர் அனைத்தும் மணலால் உறிஞ்சப்பட்டு காலியாகிவிடும். இதை சமாளிக்க 2.8 கி.மீ ஏரி முழுவதும் உயர்தர பிளாஸ்டிக் கொண்டு அடிப்பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. உயர்தர பிளாஸ்டிக் எனில், 300 மைக்ரான் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் இதில் பயன்படுத்தப்படுகிறது.
உயர்தர பிளாஸ்டிக்
இயல்பாக பாலைவன மணல் தளர்வானது. மட்டுமல்லாது அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது. இப்படியான மணல் பரப்பு கொண்ட பகுதியில் சாதாரண பிளாஸ்டிக்கை பயன்படுத்தும்போது, நிச்சயம் நீர் கசியும். எனவேதான் இங்கு 300 மைக்ரான் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் நீண்ட காலத்திற்கு உப்பு தண்ணீருடன் தொடர்பில் இருந்தாலும், எந்த வேதியியல் மாற்றத்திற்கும் உள்ளாகாது. அதேநேரம் இந்த பிளாஸ்டிக்கில் இருந்து எந்த நச்சு பொருளும் வெளியேறாது. எனவே மொத்தமாக 141 கோடி லிட்டர் தண்ணீர் இதில் சேமிக்க முடியும். இந்த ஏரியை உருவாக்க ரூ. 242 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.
3 ஆண்டுகள்
இந்த திட்டம் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. இதையடுத்து, இந்த மாதம் ஏரி திறக்கப்பட உள்ளது.
இந்த ஏரி, ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் மற்றும் பார்மேர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 லட்சம் மக்களுக்கு பயன்படும். பாலைவனத்திற்கு நடுவே 50 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியா அறிவியல் பூர்வமான திட்டங்களை முன்னெடுத்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

