ரகுராம் ராஜனுக்கு முக்கிய பதவி தந்து கௌரவித்த அமெரிக்க மத்திய வங்கி..!!
உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் எடுக்க கூடிய ஒவ்வொரு முடிவும் உலக பொருளாதாரத்தையே புரட்டி போடும். அமெரிக்க மத்திய வங்கி கூட்டம், கொள்கை முடிவுகள், அறிவிப்புகளை தான் பெரும்பாலான நாடுகளின் வங்கிகள் பின்பற்றும். இத்தனை சிறப்புகள் கொண்ட அமெரிக்க மத்திய வங்கியில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்பட மூன்று இந்தியர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி தனது பணவியல் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக ஐந்து புதிய உயர்மட்ட பணி குழுக்களை அமைத்துள்ளது. இதில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ராஜ் செட்டி மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிர்வாகி ஆஷா சர்மா ஆகிய மூன்று இந்தியர்கள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச பொருளாதார கொள்கைகளை வடிவமைப்பதில் இந்திய வம்சாவளி நிபுணர்களின் செல்வாக்கு இதன் மூலம் அதிகரித்துள்ளது. இது இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அமெரிக்காவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஃபெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் , அமெரிக்க பொருளாதாரம் பல ஆண்டுகளாக அதிக பணவீக்கத்தை சந்தித்து வருவதால், மத்திய வங்கியின் செயல்பாடுகளை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் என கூறியுள்ளார். இதற்காக அவர் 15 பேர் கொண்ட நிபுணர் குழுவை உள்ளடக்கிய 5 பணி குழுக்களை உருவாக்கியுள்ளார்.
இதன்படி இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ஃபெடரல் வங்கியின் Balance Sheet Policy சார்ந்த பணி குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்தக்குழு, ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தற்போதைய சொத்து இருப்பு, அதன் பயன்பாடு மற்றும் கொள்கைகளை அமல்படுத்துவதில் அவற்றின் பங்கு உள்ளிட்டவற்றையும் லாப நஷ்டங்களையும் ஆய்வு செய்யும். ரகுராம் ராஜனுடன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கரன் டைனான் மற்றும் ஃபெடரல் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஜெர்மி ஸ்டெய்ன் ஆகியோரும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.ராஜ் செட்டி ஹார்வரடு பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணரான இவர், டேட்டா சார்ந்த பணிக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரியான ஆஷா ஷர்மா, ஏஐ தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி திறனில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளார். செனட் வங்கியியல் குழுவின் தலைவர் டிம் ஸ்காட், ரகுராம் ராஜன் போன்ற நிபுணர்களை நியமித்திருப்பது, ஃபெடரல் வங்கி புதிய மற்றும் மாறுபட்ட கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை காட்டுகிறது என பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை முடிவுகளில் வெளிப்படை தன்மையை கொண்டு வருவதையும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த புதிய சிந்தனைகளை உட்புகுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த பணி குழுக்கல் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக்குழுக்கள் தன்னிச்சையாக செயல்பட்டு, தங்கள் பரிந்துரைகளை ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டிக்கு வழங்கும்.

