4000 பேரை பணிநீக்கம் செய்யப்போகும் டாடா.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!
இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக இருக்கும் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்தில் சுமார் 4000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு சாம்ராஜ்ஜியமான வோக்ஸ்வேகன் குழுமம் சுமார் 100000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு இதற்கான ஒப்புதலை ஊழியர்கள் குழுவிடம் இருந்து வாங்கியது. இதை தொடர்ந்து இந்தியாவில் ஸ்கோடா இந்தியா வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது மொத்த ஊழியர்களில் சுமார் 12 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இந்த நிலையில் பிரிட்டன் நாட்டின் முன்னணி கார் பிராண்டாக இருக்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் பிரிட்டன் நாட்டில் மட்டும் சுமார் 4000 ஊழியர்களை அடுத்த 2 வருடத்தில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக வந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பணிநீக்கத்திற்காக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் சொல்லும் 3 முக்கிய காரணம் என்ன தெரியுமா..? கார் உற்பத்தி செலவுகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்லது, கார்களின் விற்பனையும் குறைந்துள்ளது, அமெரிக்காவின் வரி விதிப்பு மூலம் நிறுவனத்தின் அமெரிக்க வர்த்தகமும் பாதிக்கப்பட்டு உள்ளதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில் 2024, 2025 ஆகிய இரு நிதியாண்டுகளின் வர்த்தகத்தை பார்க்கும் போது கார்களின் விற்பனை, வருமானம், லாப அளவீடுகளில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் மிகவும் பிளாட்டான அளவுகளையே பதிவு செய்துள்ளது.
மேலும் இந்த 4000 ஊழியர்கள் பணிநீக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை திங்கட்கிழமை ஜாகுவார் லேண்டு ரோவர் வெளியிடும் எனவும், ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமையே தெரிவித்துள்ளதாகவும் பிரிட்டன் பத்திரிக்கையான தி டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்தை உலகளவில் நிர்வாகம் செய்யும் டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் அதன் வர்த்தகத்தை அதிகரிக்க உள்நாட்டில் உற்பத்தி, அசம்பிளி ஆகியவற்றை அதிகரித்துள்ளது. ஆனாலும் பிரிட்டனில் சுமார் 34000 ஊழியர்கள் உடன் மெஸ்ட் மிட்லேண்ட்ஸ், ஹேல்வுட், மெர்சிசைடு ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. மேலும் ஜாகுவார் லேண்டு ரோவர் சப்ளை செயின் பிரிவில் மொத்தமாக சுமார் 1.20 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
ஜூன் காலாண்டில் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்தின் வருவாய் 10 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல் வரிக்கு முந்தைய லாபம் மூன்றில் 2 பங்கு குறைந்து 109 மில்லியன் பவுண்ட் ஆக குறைந்துள்ளது. மேலும் அமெரிக்காவின் பிரிட்டன் நாட்டின் கார்கள் மீது சுமார் 10 சதவீதம் வரையிலான வரியை விதித்திருக்கும் காரணத்தால் சுமார் 29 சதவீத வர்த்தக சந்தை கொண்டிருக்கும் வட அமெரிக்க வர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டு உள்ளது.
இதனால் விற்பனையும் குறைந்திருக்கும் நிலையில் டாடா மோட்டார்ஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற காரணத்தால் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான PB பாலாஜி இந்த பணிநீக்க திட்டத்தை கையில் எடுத்துள்ளார், இவர் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரி ஆவார்.

