செய்தித் துறையில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் அரிய செய்திப் புகைப்படங்களை பதிவு செய்ததுடன், கலை, கலாசார மற்றும் சமூக நிகழ்வுகளை தனது கமரா வழியாக வரலாற்றுப் பதிவுகளாக மாற்றிய அனுபவமிக்க புகைப்பட ஊடகவியலாளராக அவர் போற்றப்பட்டார்.
வீரகேசரி பத்திரிகையின் மூத்த மற்றும் ஓய்வுபெற்ற புகைப்படப்பிடிப்பாளரான சண்முகலிங்கம் சுரேந்திரன், தனது 69ஆவது வயதில் இன்று (26) காலமானார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக வீரகேசரியில் புகைப்படப்பிடிப்பாளராக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர், ஓய்வுபெற்ற பின்னரும் கடந்த 10 ஆண்டுகளாக தனது சேவையைத் தொடர்ந்து ஊடகத்துறைக்கு பங்களித்து வந்தார்.
செய்தித் துறையில் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் அரிய செய்திப் புகைப்படங்களை பதிவு செய்ததுடன், கலை, கலாசார மற்றும் சமூக நிகழ்வுகளை தனது கமரா வழியாக வரலாற்றுப் பதிவுகளாக மாற்றிய அனுபவமிக்க புகைப்பட ஊடகவியலாளராக அவர் போற்றப்பட்டார்.
சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (26) உயிரிழந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28) காலை 10 மணியளவில், இலக்கம் 08, நித்தியபுரி, மூன்றாம் கட்டை, திருகோணமலை இல்லத்தில் நடைபெறவுள்ளதுடன், பின்னர் சம்பல் தீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
நியூஸ்21 சார்பில், மறைந்த சண்முகலிங்கம் சுரேந்திரன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியையும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எமது அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். (News21 Colombo)

