International
-Hema Vandhana
வியன்னா: ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் உள்ளது அந்த பழமையான சொகுசு பங்களா.. இங்கு சமீபத்தில் புனரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிளம்பரின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதை பற்றிதான் சோஷியல் மீடியாவிலும் ஒரே பேச்சாக உள்ளது.
அந்த சொகுசு பங்களாவின் அடித்தளத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சிமென்ட் தரையிலிருந்து ஒரு கயிறு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.. அதை அந்த பிளம்பர் கவனித்தார்.
எனவே பிளம்பர் அந்த கயிற்றை பிடித்து இழுத்து பார்த்தார். கயிறு கொஞ்சம் கூட நகரவில்லை.. அது தரையின் அடியில் இறுக்கி புதைந்து கொண்டிருந்தது. அப்படியே விட்டுவிடலாம் என்று முதலில் நினைத்தவர், கயிறு ஏன் இழுத்தாலும் வரவில்லையே என்று யோசித்தார். அதனால் தன் கையிலிருந்த மண்வெட்டியை கொண்டு, அந்தச் சிமென்ட் தரையை தோண்ட தொடங்கினார்.

கயிறை இழுத்தால் ஆச்சரியம்
அது கடினமான சிமென்ட் தளம் போலும். அதனால் சிறிது நேரம் கழித்தே சிமெண்ட் தளம் உடைய ஆரம்பித்தது.. அப்போது தரைக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த பெட்டி இருப்பதை கண்டு அதிர்ந்தார்.. அது துருப்பிடித்த பழைய இரும்புப் பெட்டியாகும்.. உடனே ஆர்வத்துடன் அந்த பெட்டியைத் திறந்து பார்த்தார்.. அதற்குள் பளபளக்கும் 30 கிலோ எடையுள்ள தங்க நாணயங்கள் குவிந்து கிடந்தன., 30 கிலோ என்றால், நம்ம ஊர் மதிப்புபடி, சுமார் 23 கோடி ரூபாய் ($2.4 மில்லியன்) ஆகும்.
உடனே அந்த தங்க நாணயங்களை வரலாற்று ஆய்வாளர்கள் சோதித்து பார்த்துள்ளனர்.. அவற்றில் ஆஸ்திரியாவின் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இசையமைப்பாளரான மொஸார்ட்டின் (Mozart) உருவம் பொறிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியானால் இந்த தங்க நாணயங்கள் அனைத்தும் 2ம் உலகப் போருக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதி செய்துள்ளனர்..
பிளம்பர் 23 கோடி லக்கி பிரைஸ்
அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட போர்ச்சூழல் மற்றும் அரசியல் கொந்தளிப்பிலிருந்து தங்கள் குடும்ப சொத்தை பாதுகாப்பதற்காக, யாரோ இப்படி, தங்கத்தைச் சீல் வைத்து தரைக்கு அடியில் புதைத்து வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
23 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க புதையல் கிடைத்த செய்தி ஊரெல்லாம் பரவியது.. இதனால் பிளம்பர் ஒரே நாளில் ஃபேமஸ் ஆகிவிட்டார்.. இதுகுறித்து டிவி சேனல் ஒன்றில் பேசிய பிளம்பர், “நான் 15 வயதிலிருந்தே கட்டுமான தளங்களில் வேலை பார்த்து வருகிறேன். பொதுவாக பழைய இடங்களில் வேலை செய்யும்போது அரிதாக ஒன்று இரண்டு பழங்கால நாணயங்கள் கிடைப்பது உண்டு.
முழு தங்க புதையல் பெட்டி
ஆனால் இப்படி ஒரு முழு புதையல் பெட்டி சிமெண்ட்டுக்குள் புதைக்கப்பட்டு கிடைக்கும் என்று என் வாழ்நாளில் நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை” என்று தனது நெகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
பொதுவாக பெரும்பாலான நாடுகளில் இது போன்ற பழங்காலப் புதையல்கள் கண்டெடுக்கப்பட்டால், அவை உடனடியாக அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு அரசு உடைமையாக்கப்படும். ஆனால், ஆஸ்திரிய நாட்டின் சட்டத்தில் ஒரு தனித்துவமான வழிமுறை உள்ளது. அங்குள்ள சட்டப்படி, ஒரு தனியார் நிலத்தில் புதையல் கண்டெடுக்கப்பட்டால், அதன் மதிப்பில் பாதியை நிலத்தின் உரிமையாளரும், மீதிப்பாதியைக் கண்டெடுத்த நபரும் சமமாக பிரித்துக் கொள்ளலாம்.
ஒரே நாளில் கோடீஸ்வரர்
இதன்மூலம், பிளம்பருக்கு சட்டப்பூர்வமாகப் பாதியளவு தொகையான சுமார் 11.5 கோடி ரூபாய் ($1.2 மில்லியன்) பங்காகக் கிடைக்க போகிறது.. ஒரே ஒரு சின்ன கயிறு, ஒரு பிளம்பரை ஒரே நாளில் கோடீஸ்வரராக மாற்றிய இந்தச் சம்பவம் உலகளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, இதே சொகுசு பங்களாவில் இன்னொரு பிளம்பர் வேலை பார்த்தாராம்.. அவரும் இதே கயிற்றைப் பார்த்திருக்கிறார். அவரும் அதை இழுக்க முயன்றுள்ளார்.. ஆனாவ் = அதற்கு பிறகு அதை வெறும் குப்பை என்று நினைத்து விட்டுவிட்டுச் சென்றுவிட்டாராம்..!!

