Last Updated:
உமர் அமீன் மற்றும் ஃபவாத் ஆலம் ஆகிய இருவரை பாகிஸ்தான் தொலைக்காட்சி அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷாசாத் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்தார்.
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிராக அரைசதம் அடித்த பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் சவுத் ஷகீல் பந்தை சந்திக்காமலே ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த முதல் பாகிஸ்தான் வீரர் என்கிற பெயரை பெற்றுள்ளார்.
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் வீரர்கள் தற்போது உள்நாட்டு தொடரில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் பிரசிடென்ட்ஸ் டிராபி தொடர் ராவல்பிண்டியில் நடந்தது. இந்த முதல் தரப் போட்டியின் போது பாகிஸ்தான் தொலைக்காட்சி (PTV) அணிக்கு எதிரான போட்டியில், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் (SBP) அணிக்காக சவுத் ஷகீல் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்யவிருந்தார். உமர் அமீன் மற்றும் ஃபவாத் ஆலம் ஆகிய இருவரை பாகிஸ்தான் தொலைக்காட்சி அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷாசாத் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்தார்.
இதையடுத்து அவரின் ஹாட்ரிக் பந்தை எதிர்கொள்ள சவுத் ஷகீல் வந்தார். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட 3 நிமிடத்துக்குள் சவுத் ஷகீல் களமிறங்க தவற, எதிரணி அவரை டைம்டு அவுட் விதிப்படி ஆட்டமிழக்க செய்ய முறையிட்டது. அதன்படி, சவுத் ஷகீல் தாமதமாக களமிறங்கியது நடுவர்கள் உறுதிப்படுத்த அவரை தகுதி நீக்கம் செய்து அவுட் வழங்கினர்.
இதனால் சவுத் ஷகீல் பேட்டிங் செய்யும் வாய்ப்பை இழந்தார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் டைம்டு அவுட் ஆன ஏழாவது வீரர், அதேநேரம், பாகிஸ்தானில் இருந்து முதல் வீரர் என்கிற துரதிர்ஷ்டவசமான சாதனையை சவுத் ஷகீல் பெற்றார். முன்னதாக, சவுத் ஷகீல் தூங்கியதன் காரணமாக, நேரம் தவறி களமிறங்கினார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதனாலேயே 3 நிமிடங்கள் தாமதமாக களமிறங்க ஆடுகளத்துக்கு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
சவுத் ஷகீல் அவுட் என அறிவிக்கப்பட்ட அடுத்த பந்தில் முகமது இர்பானை அவுட்டாக்கி பாகிஸ்தான் தொலைக்காட்சி அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷாசாத் ஹாட்ரிக் எடுத்தார். இதன்மூலம் 3 பந்தில் 4 விக்கெட்டை இழந்தது ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் அணி.
கிரிக்கெட்டில், முந்தைய பேட்டர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்குள் ஒரு புதிய பேட்டர் மைதானத்திற்கு வர வேண்டும் அல்லது 3 நிமிடத்துக்குள் அடுத்த பந்தை சந்திக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் “டைம்டு அவுட்” விதிப்படி எதிரணி முறையிடும் பட்சத்தில் நடுவர்கள் அந்த பேட்ஸ்மேனை தகுதி நீக்கம் செய்ய முடியும். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஏஞ்சலோ மேத்யூஸ் பந்தை சந்திக்க தாமதமானதால் “டைம்டு அவுட்” செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 06, 2025 3:51 PM IST


