அதனால், இப்போது நாங்கள் புதிய வீரர்களை அணியில் சேர்த்துள்ளோம். 13 வயது சிறுவனிலிருந்து ஒரு 35 வயது அனுபவசாலி வரை. இளம் ரத்தமும் அனுபவமும் கலந்து இருக்கும் ஒரு குழு உருவாகியுள்ளது. இந்த புதிய சவாலை நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். புதிய மனிதர்களை சந்திப்பது, அவர்களுடன் உறவை உருவாக்குவது, அவர்களின் திறமைகளுக்கு பின்னுள்ள தனித்துவங்களை அறிந்துகொள்வது என இது மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். கேப்டன் ஆக இருப்பதன் உண்மையான மகிழ்ச்சி இங்குதான் உள்ளது.*
சஞ்சு சாம்சன் தனது IPL பயணத்தையும் நினைவுகூர்ந்தார். 2013ம் ஆண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவர் தன் IPL பயணத்தை தொடங்கியபோது, ராகுல் டிராவிட் அந்நேரம் அந்த அணியின் கேப்டன் ஆக இருந்தார்.
“வாழ்க்கை எப்படி திரும்பிக் கொண்டே போகிறது என்று பாருங்கள். 2013ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தேர்வுகளில் நான் ஆடியபோது, ராகுல் சார் என்னைப் பார்த்து ‘நீ என் அணிக்காக விளையாடுவாயா?’ என்று கேட்டார். அந்த நாள் முதல் இன்று வரை எல்லாமே கனவு போன்றதே. இப்போது நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன், மேலும் ராகுல் சார் மீண்டும் கோச்சாக திரும்பி வந்திருக்கிறார். இது ஒரு அபூர்வமான உணர்வு. அவர் எப்போதும் ராஜஸ்தான் ராயல்ஸ் குடும்பத்தின் ஓர் அங்கமாகவே இருந்தார்.
அவர் மீண்டும் நம்முடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணியில் அவர் கோச்சாக இருந்தபோதும் நான் அவருடன் விளையாடியுள்ளேன். ஆனால், இப்போது நான் கேப்டன் ஆக இருக்கும் தருணத்தில், அவரை கோச்சாகப் பெறுவது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. அவரிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறேன்.”
ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இரண்டாவது முறை கோச்சாக வரும் சம்பவம் குறித்து சஞ்சு சாம்சன் மேலும் கூறினார்:
“நான் அவரை எப்போதுமே தொலைவில் இருந்து கவனித்து வந்திருக்கிறேன், அதே நேரத்தில் அவருடன் நேரடியாகவும் பணியாற்றியிருக்கிறேன். அவர் ஒரு முழுமையான தொழில்முறை அணுகுமுறையைக் கொண்டவர். அணியின் ஒவ்வொரு விஷயத்திலும் முழுமையாக ஈடுபட்டு இருப்பார். கடந்த மாதம் நாக்பூரில் அவர் இருந்த போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலில் நின்று வீரர்களை கவனித்து, அவர்களிடம் கலந்துரையாடி, அணியின் வெற்றிக்காக தன்னுடைய முழுப் பொறுப்பையும் மேற்கொண்டிருந்தார். அணியின் A முதல் Z வரை அவர் கவனம் செலுத்துகிறார். இது என்னை மிகவும் ஈர்க்கிறது. அணிக்கு எப்படித் தயாராக வேண்டும் என்பது குறித்து அவரிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.”
ராகுல் டிராவிட் எப்போதாவது சோர்வடைவாரா? என்ற கேள்விக்கு சஞ்சு சாம்சன் உடனே பதிலளித்தார்:
“அவர் கிரிக்கெட்டிற்காக கொண்டிருக்கும் காதலே அதற்கு காரணம். அது அவருடைய கிரிக்கெட்டுக்கு செலுத்தும் மரியாதை. நான் அவரை பலமுறை வெயிலில் காய்ந்துகொண்டே, தனியாக ஸ்டேண்டில் நின்று ஷாடோ ப்ராக்டிஸ் செய்யும்படி பார்த்திருக்கிறேன். இன்னும் கூட அவர் முழுவதுமாக கிரிக்கெட்டில் மூழ்கி இருப்பார். அவருடைய பற்றியை கவனித்து நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.”
இளம் வயதில் ராகுல் டிராவிட் அவருக்கு கூறிய சில முக்கியமான ஆலோசனைகளை கேப்டனாக இருக்கும் இன்று வரை பயன்படுத்தி வருகிறார் என்றும் சஞ்சு கூறினார்:
“கேப்டனாக, அவர் முன்மாதிரியாக செயல்பட்ட விதத்தை நான் பார்த்துள்ளேன். ஆட்டத்தில் மட்டுமல்ல, வெளிப்புறத்திலும் அவர் எவ்வளவு பொறுப்பாக செயல்பட்டார் என்பதை நான் கவனித்திருக்கிறேன். அவர் அணியின் கேப்டன் ஆனபோது, ஒரு முறையும் விருப்ப பயிற்சி (optional practice) தவிர்த்தது இல்லை. டிரஸ்ஸிங் ரூமில் இளம் வீரர்களுடன் எவ்வாறு நடந்துகொண்டார், மூத்த வீரர்களுடன் எவ்வாறு பேசினார், அணிக்குள் உறவுகளை எப்படிப் பேணி வளர்த்தார், புதிய வீரர்களை எவ்வாறு வரவேற்றார் – இவற்றை எல்லாம் நான் கவனித்து கற்றுக்கொண்டேன். இப்போது கேப்டனாக இருக்கும் நிலையில், நானும் அந்த வழிமுறைகளை பின்பற்ற முயல்கிறேன்.” என்றார்.
March 15, 2025 1:32 PM IST