Last Updated:
TN Agriculture Budget 2025 | தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கரும்புக்கான ஊக்கத்தொகை டன்னுக்கு 215 ரூபாயில் இருந்து 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரவைக்கு கரும்பு வழங்கிய உழவர்களுக்கு, டன் ஒன்றுக்கு 349 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையாக உயர்த்தி வழங்கப்படும் என்று வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் 2025-26-ஆம் நிதிஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சர்க்கரை ஆலைகளுக்கு 2024-25 அரவைப் பருவத்துக்கு கரும்பு வழங்கிய உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று கூறினார்.
இதனால், விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்பிற்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
உழவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல், சன்ன இரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 130 ரூபாயும், சாதாரண இரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 105 ரூபாயும் ஊக்கத்தொகையாக தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 147 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1,452 கோடி ரூபாய் ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், கரும்புக்கும் ஒரு மெட்ரிக் டன்னுக்கு 215 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. இதுவரை 425 இலட்சம் மெட்ரிக் டன் கரும்புக்கு 848 கோடி ரூபாய் ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஊக்கத்தொகை உயர்வு
2024-2025ஆம் ஆண்டிற்கான அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு 349 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல் கூடுதலாக வழங்கப்படும். இதன்மல, கரும்புக்கு டன்னுக்கு 3,500 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் சுமார் 1,30,000 கரும்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதற்காக 297 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு இழப்பீடு, நிதி உதவிகள் உயர்வு : வேளாண்மைத்துறை அமைச்சர் பட்ஜெட்டில் அறிவிப்பு
மேலும், கரும்பு சாகுபடியை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். அதிக சர்க்கரை, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட புதிய ரக கரும்புகளை விவசாயிகள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள். விவசாயிகளின் சாகுபடி செலவைக் குறைக்கும் வகையில் கரும்பு விதைக்கரணைகள், நாற்றுகள், இயந்திரம் மூலம் அறுவடை செய்ய ஏற்ற அகலப்பார் நடவு முறை, நுண்ணூட்ட உரக்கலவை, தோகை தூளாக்குதல், நிலப்போர்வை அமைத்தல் போன்றவற்றை மானிய விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்திற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் 10 கோடியே 53 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
March 15, 2025 1:47 PM IST


