International
oi-Hema Vandhana
பீஜிங்: குடும்ப வாழ்க்கையில் சின்ன சின்ன ஊடல்களும் கோபங்களும் வருவது இயல்புதான்.. ஆனால், அதுவே பல ஆண்டுகள் நீடித்தால் என்னவாகும்? ஜப்பான் நாட்டில் தம்பதி ஒன்று ஒரே வீட்டில் வசித்துக்கொண்டும், கடந்த 20 ஆண்டுகளாக ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல் வாழ்ந்துள்ளது உலகளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன தெரியுமா?
ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ பகுதியில் வாழ்பவர் ஒகுவோ கடாயாமா. இவருடைய மனைவி பெயர் யும்பி. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

தினமும் ஒரே டைனிங் டேபிளில் உட்கார்ந்துதான் சாப்பிடுவார்கள்.. ஆனால், கடந்த 20 வருடங்களாக மனைவி யும்பியிடம் கணவர் ஒகுவோ ஒரு வார்த்தை கூட பேசியதே இல்லை..
ஜப்பான் தம்பதி
மனைவி யும்பி என்ன கேட்டாலும், கணவர் தலையை மட்டும் ஆட்டுவார் அல்லது ஏதாவது தனக்கு வேண்டும் என்றால், உருமிக் காட்டுவார், இருமிக் காட்டுவார்.. ஆனால், இவர்களுக்குள் பெரிய சண்டையோ, பெரிய பிரச்சனைகளோ எதுவுமே வரவில்லை. அப்படி இருந்தும் கணவர் ஏன் பேசாமல் இருக்கிறார் என்று யாருக்குமே புரியவில்லை.
நினைவு தெரிந்ததிலிருந்தே தன்னுடைய அம்மாவும், அப்பாவும் பேசிக்காமல் இருப்பதை கண்டு, பிள்ளைகளுக்கு வெறுப்பாகி விட்டதாம்.. அதிலும், இவர்களது வாழ்க்கையை பார்த்து அலுத்துப் போன இவர்களது 18 வயது இளைய மகன், அங்கிருந்த ஒரு பிரபல டிவி நிகழ்ச்சியை தொடர்பு கொண்டு உதவி கேட்டார். “என் அம்மா, அப்பா ரெண்டு பேரும் நேருக்கு நேர் பேசி நான் பார்த்ததே இல்லை. தயவுசெஞ்சு அவங்களை பேச வையுங்க” என்று கேட்டுக்கொண்டார்.
பூங்காவில் சந்தித்து பேசிய கணவன்
உடனே அந்த டிவி சேனல், இந்த தம்பதியை நேரில் சந்தித்து பேச வைக்க முயற்சி செய்தனர்.. இந்த தம்பதி முதன்முதலில் சந்தித்த அதே பூங்காவிற்கு தம்பதியை வரவழைத்தனர்.. இவர்களது பிள்ளைகள் 3 பேரும் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சேனல்காரர்கள் ஒகுவோவிடம், ஏன் நீங்கள் உங்கள் மனைவியிடம் பேசுவதில்லை என்று கேட்டனர்.. அதற்கு கணவர்,”உண்மையச் சொன்னா, என் மனைவி குழந்தைகள் மேல அதிக பாசம் காட்டினார்.. அதை பார்த்து எனக்குள்ள ஒரு சின்ன பொறாமை வந்துடுச்சு. அதான் கோபத்துல பேசாம இருந்துட்டேன். இனி பழச மறந்துட்டு புதுசா பேச தொடங்குகிறேன்” என்றார்..
20 வருடம் பேசாத மனைவி
குழந்தைகள் மீது வந்த பொறாமையால் தான், 20 வருஷம் பேசாமல் இருந்தார் என்பதை அறிந்ததும் அங்கிருந்த அனைவருமே சிரித்துவிட்டார்கள்..
பிறகு மனைவியின் அருகில் சென்ற கணவர் ஒகுவோ, 20 வருட மவுனத்தை உடைத்து பேச தொடங்கினார். “நாம பேசி ரொம்ப காலம் ஆச்சு இல்லை? இத்தனை வருஷமா குழந்தைகளை நீ நல்லா பாத்துக்கிட்ட. ரொம்ப கஷ்டப்பட்டாய்… உனக்கு என் நன்றி.. இப்போது வரை நாம் எத்தனையோ தடைகளை தாண்டி வந்திருக்கிறோம். இனி வருவதையும் சேர்ந்து எதிர்கொள்வோம் என்று நம்புகிறேன். இனி நாம் பேசலாம் என்று நினைக்கிறேன்” என்றார்.. ” என்று உருக்கமாக பேசினார்.
வைரலாகும் வீடியோ
இதையெல்லாம் தூரத்தில் மறைந்து நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 3 பிள்ளைகளுமே சிரித்து விட்டார்கள்.. இந்த சம்பவம் நடந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்த தம்பதி பூங்காவில் பேசத் தொடங்கிய அந்த வீடியோ இப்போது மீண்டும் உலகளவில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நம்ம ஊரில் 20 நிமிடங்கள் மனைவிகள் அமைதியாக இருந்தாலே, “அப்பாடா… வீடு எவ்வளவு அமைதியாக இருக்கிறது!” என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் கணவர்களே அதிகம்… அவர்களுக்கு மத்தியில், “என் மீது கவனம் செலுத்தாமல் குழந்தைகள் மீது அதிக பாசம் காட்டுகிறாயே” என்று சொந்த குழந்தைகளிடமே போட்டி போட்டுக்கொண்டு, 20 ஆண்டுகள் மனைவியிடம் பேசாமல் வீம்பாக இருந்த இந்த ஜப்பானியக் கணவரை பார்த்தால், நம்மூர் ஆண்களுக்கு வியப்பில் தலை சுற்றத்தானே செய்யும்!??



