சிறையிலுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் அமைச்சர் நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24) 116 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்பின் போது பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும், ஆதரவாக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன. எவரும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகிக்கவில்லை.
கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியற்ற நிலைமை மற்றும் மோதல்களைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினரால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.
குறித்த மோதல்களில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் சிலர் உயிரிழந்ததுடன், பலர் பலத்த காயமடைந்தனர்.
சிறையிலுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் அமைச்சர் நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
இதனடிப்படையில், கடந்த ஜூலை 22 ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, இந்தச் சம்பவத்திற்கு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர். இருப்பினும், இந்தச் சம்பவத்திற்காக அமைச்சரைப் பொறுப்பாக்குவது நியாயமற்றது எனத் தெரிவித்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அவருக்கு ஆதரவாகப் கருத்துக்களை முன்வைத்தனர்.
இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தது.

